ADDED : ஏப் 24, 2025 04:47 AM
சென்னை : ''ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டம், பாண்டியாறு - பொன்னம்புழா திட்டம் குறித்து பேச, கேரளாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால், கேரளா மெத்தனமாக உள்ளது,'' என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - அம்பேத்கர் குமார்: வந்தவாசி நகராட்சியில், முதல் மூன்று வார்டுகளில், இறந்தவர்களின் உடலை நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரி வழியே எடுத்துச் செல்கின்றனர். சாலை அமைக்க, நீர்வளத்துறை தடையில்லா சான்று வழங்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: உறுப்பினர் எழுதிக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டம், பாண்டியாறு - பொன்னம்புழா ஆறு திட்டத்திற்கு, கேரள அரசுடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இத்திட்டங்களை நிறைவேற்ற, பணிகளை அமைச்சர் வேகப்படுத்துவாரா?
அமைச்சர் துரைமுருகன்: பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தத்தில், ஆனைமலை ஆறு, நல்லாறு ஆகியவற்றின் தண்ணீரை திருப்பிக் கொள்ளலாம். கேரளாவில் அணை கட்டும் பணி முடிந்தபின், தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர். அணை கட்டி பல ஆண்டுகளாகி விட்டது.
நியாயமாக நாம் தண்ணீரை திருப்பிக்கொள்ள வேண்டும். பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். கேரள அரசு மெத்தனமாக உள்ளது. நேரில் சந்திக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

