கைவினைஞர்கள் ஊதியம் 275 சதவீதம் அதிகரிப்பு; காதி கிராம தொழில் ஆணைய தலைவர் தகவல்
கைவினைஞர்கள் ஊதியம் 275 சதவீதம் அதிகரிப்பு; காதி கிராம தொழில் ஆணைய தலைவர் தகவல்
ADDED : ஆக 02, 2025 06:37 AM

திருப்பூர் : ''நம் நாட்டில் கைவினைஞர்களுக்கான ஊதியம், கடந்த 11 ஆண்டுகளில் 275 சதவீதம் அதிகரித்துள்ளது'' என்று, காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் கூறினார்.
காதி கிராம தொழில் ஆணையம் சார்பில், சென்னை மண்டல அளவில், நலிவடைந்த கிராம தொழில் முனைவோர், கை வினைஞர்களுக்கு உற்பத்தி கருவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா, திருப்பூரில் நேற்று நடந்தது.
மாநில இயக்குனர் சுரேஷ் வரவேற்றார். இதில், 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள உற்பத்திக்கருவிகள் மற்றும் உபகரணங்களை 620 பயனாளிகளுக்கு வழங்கி, ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் பேசிய தாவது:
காந்தி கிராம முன்னேற்றத்துக்காக கண்ட கனவுகளை இன்று மோடி, புதிய சிந்தனை மற்றும் உறுதியுடன் நனவாக்கி வருகிறார்.
பல்வேறு திட்டங்களின் கீழ் கதர் மற்றும் கிராம தொழில் ஏற்றம் பெற்று வருகிறது. கதரை உலகமயமாக்கல் என்ற பிரதமரின் பிரசாரம், கடின உழைப்பையும் அதன் பயனையும் உலகுக்கு காட்டுவதாக அமையும்; கிராமப்புற பொருளாதாரம் மேம்படும்; நாடு முழுவதும் 3 ஆயிரம் நிறுவனங்களும், 5 லட்சம் கைவினைஞர்களும் இத்துறை வாயிலாக பயன்பெறுகின்றனர்; இதில் 80 சதவீதத்துக்கு மேல் பெண்கள். கடந்த 11 ஆண்டுகளில் இவர்கள் ஊதியம் 275 சதவீதம் அதிகரித்துள்ளது.
கதர் கிராமத் துறையின் உற்பத்தி 27 ஆயிரம் கோடி என்றிருந்தது; தற்போது 1.16 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பொருட்கள் விற்பனை 33 ஆயிரம் கோடியிலிருந்து 1.70 லட்சம் கோடி ரூபாயாகவும், கதர் ஆடை உற்பத்தி 880 கோடியிலிருந்து 3,783 கோடியாகவும், இதன் விற்பனை 1170 கோடியிலிருந்து 7145 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. ேமலும், 2.88 லட்சம் கருவி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
10 லட்சத்துக்கும் மேற்பட்ட அலகுகள் துவங்கப்பட்டுள்ளன. 27 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
அது மட்டுமின்றி 90 லட்சம் பேர் வேலை வாய்ப்பும் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் தமிழ்நாடு சர்வோதய சங்க செயலாளர் சரவணன், தென் மண்டல துணை முதன்மை செயல் அலுவலர் ரெட்டி, மும்பை துணை முதன்மை செயல் அலுவலர் நல்லமுத்து உள்ளிட்டோர் பேசினர்.
மதுரை மண்டல இயக்குநர் செந்தில் குமார் நன்றி கூறினார்.