நாகையில் சுனாமியால் கிடைத்த வளர்ப்பு மகளின் குழந்தையை கொஞ்சி ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி
நாகையில் சுனாமியால் கிடைத்த வளர்ப்பு மகளின் குழந்தையை கொஞ்சி ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி
ADDED : அக் 27, 2024 12:18 AM

நாகப்பட்டினம்,:சுனாமியால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை குழந்தை பருவம் முதல், அள்ளி அரவணைத்து, வளர்த்து திருமணம் செய்து வைத்த கூடுதல் தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன் தம்பதியினர், அவர் ஈன்றெடுத்த குழந்தையையும், பேத்தியாக உச்சி முகர்ந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டத்தில் கோரத் தாண்டவம் ஆடிச் சென்ற சுனாமியின், இரண்டாவது நாளில், கீச்சாங்குப்பம் கடலோரத்தில் இரண்டு வயது குழந்தையின் அழுகுரல் கேட்ட மீனவர்கள் குழந்தையை மீட்டு, அப்போதைய கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
பராமரிப்பு
அதேபோல், வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டரை வயது குழந்தையும் கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளையும் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்க உத்தரவிட்ட ராதாகிருஷ்ணன், வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு சவுமியா என்றும், கீச்சாங்குப்பத்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு மீனா என்றும் பெயர் சூட்டினார்.
அவர்களை தன் சொந்த குழந்தைகளாக பாவித்து, பெற்றோரை போல் கவனித்துக் கொண்டதால், ராதாகிருஷ்ணனை அப்பா என்றும், அவரது மனைவி கிருத்திகாவை அம்மா என்றும் குழந்தைகள் அழைத்து வந்தனர்.
பதவி உயர்வில் ராதாகிருஷ்ணன் நாகையை விட்டுச் சென்றாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்னை சத்யா காப்பகத்திற்கு வந்து குழந்தைகளை கவனித்து வந்தார். இந்நிலையில், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் வளர்ந்து திருமணமாகி சென்றுவிட்டனர்.
சவுமியாவும், மீனாவும், 18 வயதை எட்டியதால், காப்பகத்தில் தங்குவதில் நடைமுறை சிக்கல் இருந்ததால், சுகாதாரத் துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் அனுமதியோடு, நாகை, கடற்கரை சாலையில் உள்ள மலர்விழி - -மணிவண்ணன் தம்பதியினர் சவுமியாவையும், மீனாவையும் தத்தெடுத்து வளர்த்தனர்.
இந்நிலையில், பி.ஏ., பட்டதாரியான சவுமியாவிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்த வளர்ப்பு பெற்றோர், திருப்பூர், தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் சுபாஷ் என்பவரின் குடும்பத்தோடு திருமணம் பேசி முடித்தனர்.
திருமணம்
சுபாஷ்- -- சவுமியா திருமணம், 2022 பிப்., 6ம் தேதி நாகையில், ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கடந்த 21ம் தேதி சவுமியா, அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
தகவலறிந்து நேற்று குடும்பத்துடன் நாகை வந்த ராதாகிருஷ்ணன், மலர்விழி வீட்டிற்கு சென்று, மகிழ்ச்சியோடு சவுமியாவை அரவணைத்து, ஆசிர்வதித்து, குழந்தையை உச்சி முகர்ந்து முத்தமிட்டு, நீண்ட நேரம் மடியில் வைத்திருந்து ராதாகிருஷ்ணன் தம்பதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.
சவுமியா கூறுகையில், ''சுனாமி என்ற பேரிடரால் எனக்கு நல்ல அப்பா, அம்மா, தம்பி கிடைத்தனர். சுனாமி வந்திருக்காவிட்டால் நான் யாரோ, எங்கு, எப்படி இருந்திருப்பேனோ தெரியாது.
''ஆலமரம் போல் எங்களை அரவணைக்கும்அப்பா ராதாகிருஷ்ணன், அம்மா கிருத்திகாவும், தாத்தா, பாட்டியாக மாறியுள்ளனர்,'' என்றார் ஆனந்த கண்ணீருடன்.