அருந்ததியர் உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்ய கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
அருந்ததியர் உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்ய கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
ADDED : அக் 22, 2024 07:26 PM
சென்னை:''அருந்ததியர் உள் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 7ல் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும்,'' என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
உள் இடஒதுக்கீடு என்ற பெயரில், தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர் ஆகிய இரு சமூகங்களின் லட்சக்கணக்கான இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமை தட்டிப் பறிக்கப்படுகிறது. அருந்ததியருக்கே அனைத்து இடங்களையும் தாரைவார்க்கும் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு முன்னுரிமை அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, 2006ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு தலா, 10 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமையை மாஞ்சோலையில் நிலைநாட்ட வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை உடனே மூடி, பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீட்டில் துவக்கப்படும் தொழிற்சாலைகளை, தென் மாவட்டங்களில் பரவலாக துவங்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர் இளைஞர்களுக்கு எதிராகவும், ஆதிதிராவிடர்களுக்கு எதிராகவும் அதிகரிக்கும் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ள மற்றும் துவக்கப்பட உள்ள தொழிற்சாலைகளில், கடினமான மற்றும் மதிப்பு குறைவான பணிகளுக்கு, தென் மாவட்ட இளைஞர்களை பயன்படுத்தும் போக்கை தடுத்து, உயர் பதவிகளில் முன்னுரிமை தர வேண்டும். அதற்கான விதிமுறைகளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உருவாக்க வேண்டும்.
இந்த 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய தமிழகம் சார்பில், நவ., 7-ல், கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.