ஹிந்து மக்கள் கட்சி பொங்கல் விழாவில் குடந்தை தி.மு.க., எம்.எல்.ஏ., பங்கேற்பு
ஹிந்து மக்கள் கட்சி பொங்கல் விழாவில் குடந்தை தி.மு.க., எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜன 14, 2024 06:28 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த சனாதன பொங்கல் விழாவில் தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் பங்கேற்றது சமூக வலை தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
தி.மு.க., அமைச்சர் உதயநிதி, எம்.பி., ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர் சனாதன கொள்கைக்கு எதிராக தொடர்ந்து விமர்சித்துப் பேசினர். இது அரசியல் வட்டாரங்கள் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து சனாதனத்துக்கு எதிராக பேசிய தி.மு.க.,வை, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், மாநில பொதுச்செயலர் குருமூர்த்தி, சனாதனம் போற்றும் கலாசார பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
விழாவில் தி.மு.க.,வை சேர்ந்த கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டார். தி.மு.க.,வின் சீனியர் நிர்வாகியான அவருக்கு தெரியாத அரசியல் அல்ல.
இருப்பினும் விமர்சனம் செய்து வரும் கட்சி சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றது, தி.மு.க.,வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே மத வேறுபாடு இன்றி எம்.எல்.ஏ., அன்பழகன் அனைத்து விழாக்களிலும் பங்கேற்பவர். அதன்படி ஹிந்து மக்கள் கட்சி நடத்திய விழாவிலும் நட்பு ரீதியாக பங்கேற்றார்.
இதில் எந்த சர்ச்சையும் இல்லை என அவரது ஆதரவாளர்கள் சமூக வலை தளங்களில் விளக்கம் அளித்து வருகின்றனர்.

