ADDED : ஏப் 05, 2025 12:41 AM
''சட்ட பாடப்புத்தகங்கள், தமிழில் மொழி பெயர்க்கப்படும்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சட்டசபையில் , சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்தபோது, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழில் சட்டம் பயில விரும்பும், அரசு சட்டக்கல்லுாரி மாணவர்களுக்காக, அனைத்து சட்ட பாடப்புத்தகங்கள், சட்ட முன் படிப்பு புத்தகங்கள், 22 லட்சம் ரூபாய் செலவில், தமிழில் மொழிபெயர்க்கப்படும்
மாணவர்களுக்கு புதுமையான கற்றல் அனுபவத்தை அறிமுகப்படுத்த, அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளிலும், ஒரு கோடி ரூபாயில், திறன்மிகு வகுப்பறை எனப்படும், 'ஸ்மார்ட் கிளாஸ்ரூம்' அமைக்கப்படும்
அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளிலும், ஒரு கோடி ரூபாயில், மின் நுாலகம் அமைக்கப்படும்
சர்வதேச, தேசிய சட்டப் பல்கலைகளுடன், மாணவர் பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்படும்
திருச்சி, கோவை, மதுரை, நெல்லை அரசு சட்டக்கல்லுாரி மாணவ - மாணவியர் விடுதிகள், 3 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்
திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கு, இந்த ஆண்டு 2.50 கோடி ரூபாய், அடுத்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்
சட்டத்துறை நுாலகத்தில் 31 லட்சம் ரூபாயில், மின் நுாலகம் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.