ரஜினி நடித்த 'வேட்டையன்' படத்திற்கு தடை கோரி வழக்கு
ரஜினி நடித்த 'வேட்டையன்' படத்திற்கு தடை கோரி வழக்கு
ADDED : அக் 03, 2024 11:07 PM
மதுரை:வேட்டையன் படத்திற்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
மதுரை உலகனேரி பழனி வேலு தாக்கல் செய்த பொதுநல மனு:
ரஜினிகாந்த் நடித்த, வேட்டையன் படம் அக்., 10ல் வெளியாகிறது. இதன் முன்னோட்ட காட்சிகளில் கிரிமினல்கள் மீது போலீசார் நடத்தும் என்கவுன்டரை நியாயப்படுத்தும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இது, சட்டவிரோதம். இவற்றை திரைப்பட தணிக்கைக்குழு நீக்கவில்லை.
பொழுதுபோக்கு அம்சம் என்ற பெயரில் இதை அனுமதிப்பது, ஜனநாயகத்திற்கு எதிரானது. என்கவுன்டர் என்ற பெயரில், போலீசார் சட்டவிரோதமாக செய்யும் கொலையை நியாயப்படுத்த முடியாது. இதை வலியுறுத்தி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன்.
படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். ஆட்சேபனைக்குரிய வசனத்தை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு, தமிழக தலைமைச் செயலர், திரைப்பட தணிக்கைக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.