விதிகளை மீறிய அரசு கேபிள் 'டிவி'யின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு
விதிகளை மீறிய அரசு கேபிள் 'டிவி'யின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு
ADDED : மே 01, 2025 05:46 AM

சென்னை : 'ட்ராய்' என்ற தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய விதிகளை மீறிய, தமிழக அரசு கேபிள், 'டிவி' மற்றும் எம்.எஸ்.ஓ.,க்கள் உள்ளிட்டோரின், உரிமத்தை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு, ஜூன், 9க்குள் சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த, 'ஐஹார்ஸ் பிக்சர்ஸ்' உரிமையாளர் கவுண்டேயா என்பவர் தாக்கல் செய்த மனு:
'எஸ்.பி.ஐ., மியூசிக்' என்ற நிறுவனத்திடம் இருந்து, திரைப்படங்கள், பக்தி பாடல்களின் ஆடியோ மற்றும் வீடியோ விநியோகிக்கும் உரிமத்தை, 'ஐஹார்ஸ் பிக்சர்ஸ்' பெற்றுள்ளது.
தமிழகம், புதுச்சேரி எல்லைக்குள், 'கேபிள் டிவி' சேவைகளை வழங்கும், கேபிள் ஆபரேட்டருக்கு, எஸ்.பி.ஐ., மியூசிக் நிறுவன ஆடியோ, வீடியோ பாடல்களை விநியோகிக்க, கடந்த ஜன.1ல் ஒப்பந்தம் போடப்பட்டது. வரும் டிச.31 வரை ஒப்பந்த காலம் உள்ளது.
தமிழகத்தில் டி.சி.சி.எல்., தமிழக அரசு கேபிள் டிவி, எஸ்.சி.வி., என, 14 'மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்' என்று அழைக்கப்படும், 'எம்.எஸ்.ஓ.,'க்கள் கேபிள் 'டிவி' சேவைகளை வழங்கி வருகின்றன.
இவை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட, ஆடியோ, வீடியோ பாடல்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும். மாதத்துக்கு, 3.50 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தி, எங்களிடம் உரிமம் பெற்றுள்ளன.
அவர்கள், கேபிள் நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள்.
விதிகளை மீறினால், அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய முடியும்.
சென்னை அண்ணா நகரில் உள்ள, 'வேல் டிவி' உட்பட, மாநிலம் முழுதும் உள்ள உள்ளூர் கேபிள் 'டிவி' சேனல்கள், எங்களிடம் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக ஆடியோ, வீடியோ பாடல்களை ஒளிபரப்பி வருகின்றன. இவர்களுக்கான சிக்னல்களை, இந்த, 14 எம்.எஸ்.ஓ.,க்கள் வழங்குகின்றன. இந்த விதி மீறலை, எம்.எஸ்.ஓ.,க்கள் தடுக்க வேண்டும்.
இதுகுறித்து எம்.எஸ்.ஓ.,க்களுக்கு, ஜன., 28ல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு, உரிய பதில் அளிக்கவில்லை.
எனவே, சட்ட விரோதமாகவும், உரிமம் பெறாமலும் ஆடியோ, வீடியோ பாடல்களை ஒளிபரப்பும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் சிக்னலை, எம்.எஸ்.ஓ.,க்கள் உடனே நிறுத்த வேண்டும். சென்னையில் உள்ள வேல் டிவி, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நிரந்தரமாக பாடல்களை ஒளிப்பரப்பவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ''தமிழகம், புதுச்சேரியில் உள்ள 500க்கும் மேற்பட்ட கேபிள் டிவி சேனல்கள், அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக, படங்கள், ஆடியோ, வீடியோ பாடல்களை ஒளிப்பரப்புகின்றன.
விதிகளை மீறியதற்காக, 14 எம்.எஸ்.ஓ.,க்களின் உரிமத்தை ரத்து செய்ய, 'ட்ராய்'க்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, அந்த மனுவுக்கு, அரசு கேபிள் டிவி உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன்., 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

