அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ'க்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க கோரி வழக்கு
அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ'க்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க கோரி வழக்கு
ADDED : அக் 02, 2025 12:49 AM

சென்னை: கரூர் துயரம் போல மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனு விபரம்:
கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், த.வெ.க., தலைவர் விஜய், குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர், ஏழு மணி நேரம் தாமதமாக வந்ததால் தான், இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதபடி, அனைத்து அரசியல் கட்சிகளின், 'ரோடு ஷோ'க்களுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
இந்த நெறிமுறைகளை மீறும்பட்சத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர், ரோடு ஷோ-வில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை காவல் துறையினர் தடுக்க வேண்டும்.
பாதுகாப்பு தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை, எந்த கட்சிக்கும் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். கரூர் துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், நாளை விசாரணைக்கு வரவுள்ளது.