அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வழக்கு
அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வழக்கு
ADDED : அக் 24, 2024 04:02 AM

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தாக்கலான வழக்கில் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சென்னை வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடுகின்றனர். இதில் ராமேஸ்வரம் நகராட்சி பகுதி கழிவு நீர், குப்பைகள் கலக்கின்றன. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கழிவுநீர் கலப்பதை தடுக்க கலெக்டர், கோயில் செயல் அலுவலர், நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: பாதாளச்சாக்கடை பணி முடிந்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் 15 நாட்களில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் எங்கு விடப்படும் என்பது குறித்து கலெக்டர், நகராட்சி கமிஷனர் நவ.,8 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.