ADDED : பிப் 26, 2026 01:24 AM

சென்னை: சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீசிட்டியில் அமைந்திருக்கும் 'க்ரியா' பல்கலைக்கழக வளாகத்தில், 'மேஜிக் 20 தமிழ்' நிறுவனத்தின் சார்பில் தொழில்முனைவோருக்கான மூன்று நாள் தலைமைத்துவ பயிற்சி வகுப்பு சமீபத்தில் நடைபெற்றது.
சிறந்த தலைமைத்துவம் என்பது வெறும் அதிகாரம் செலுத்துவது அல்ல; தன்னை அறிதல், நிதி ஆளுமை, தரவுகளை கையாளுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவை அரவணைத்து செல்வது ஆகியவையே என்பதை இந்த பயிற்சி வகுப்பு வலியுறுத்தியது.
நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கையாளர்களிடம் மட்டுமே விட்டுவிடாமல், அன்றாட பணப்புழக்கத்தை தலைவர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என இதில் அறிவுறுத்தப்பட்டது.
தரவுகள் மற்றும் கூட்டு செயல்பாட்டின் அவசியத்தை உணர்த்தும் வகையில், தங்கம் தேடும் மெய்நிகர் மாதிரி விளையாட்டு, பயிற்சியின் போது நடத்தப்பட்டது. தரவுகளை பயன்படுத்த தயங்குவதும், சக குழுக்களுடன் இணைந்து செயல்படாத அதீத போட்டி மனப்பான்மையும் வணிகத்தில் தோல்வியையே தரும் என்பது இதன் வாயிலாக விளக்கப்பட்டது.
மேலும், செயற்கை நுண்ணறிவை வெறும் இயந்திரமாக பார்க்க கூடாது என்ற பார்வையும் கிடைத்தது. ஏ.ஐ., கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுப்படையான பதில்களில் சிக்காமல் இருக்க, புதிய அணுகுமுறை கற்றுக்கொடுக்கப்பட்டது.
ஏ.ஐ., கருவிக்கு ஒரு பொறுப்பை அல்லது பாத்திரத்தை கொடுத்து, நமது சூழல் மற்றும் வரம்புகளை தெளிவாக விளக்கி, எத்தகைய வடிவில் விடை வேண்டும் என அதற்கு உணர்த்தி, சக பணியாளரை போல் அணுகி சிறந்த முடிவுகளை பெறும் உத்திகளும் கற்றுத்தரப்பட்டன.
தொழில்நுட்பம், தரவுகள் மற்றும் மனித பண்புகளை நேர்த்தியாக இணைத்து செயல்படுவதே எதிர்காலத்தின் சிறந்த தலைமைத்துவம் என்பதை உணர்த்துவதாக இருந்தது இப்பயிற்சி.

