ADDED : ஜூன் 17, 2025 06:30 AM

'காதல் திருமணம் செய்தது கொலை குற்றமா; எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்' என, வாலிபர் தனுஷ் கூறினார்.
காதல் திருமணம் செய்த, திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் கூறியதாவது:
நானும், விஜயஸ்ரீயும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதற்கு, விஜயஸ்ரீ வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ், தொடர்ந்து பிரச்னை செய்து வந்தார். எங்கள் வீட்டிற்கு வந்து, என் தம்பியை அழைத்து சென்று மீண்டும் கொண்டு வந்து விட்டனர்.
நாங்களும், போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக, திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி முன் தெரிவித்து விட்டோம்.
எங்களுக்கும், விஜயஸ்ரீ பெற்றோருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், எம்.எல்.ஏ., ஜெகன்மூர்த்திக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவர் மிரட்டவும் இல்லை. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., என்னிடம் ஏன் புகாரை வாபஸ் பெறுகிறீர்கள் என்று கேட்டார். காலப் போக்கில் நாங்கள் இரு வீட்டாரும் சமாதானமாகி விடுவோம் என, அவரிடம் கூறினேன். எனக்கோ, என் மனைவிக்கோ, எங்கள் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய விருப்பம் இல்லை.
இந்த பிரச்னையால், பொருளாதார ரீதியாக நிறைய பாதிக்கப்பட்டு உள்ளோம். நானும், விஜயஸ்ரீயும் கொலை குற்றமா செய்தோம்?
காதல் திருமணம் செய்தது குற்றமா; எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள். என் மனைவியை தொடர்ந்து படிக்க வைக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

