காசி - தமிழகம் இடையேயான ஒற்றுமையை எப்போதும் கொண்டாடுவோம்!
காசி - தமிழகம் இடையேயான ஒற்றுமையை எப்போதும் கொண்டாடுவோம்!
ADDED : பிப் 16, 2025 12:21 AM

காசி தமிழ் சங்கமம் - 2025, நேற்று துவங்கியுள்ளது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு, மேலும் ஒரு சான்றாக இது விளங்குகிறது. பிப்., 15 முதல் 24 வரை நடக்க உள்ள இந்த தனித்துவம் வாய்ந்த கலாசார விழா, நாட்டின் மிகத் தொன்மையான இரண்டு ஆன்மிக வளம் உடைய பகுதிகளான காசியையும், தமிழகத்தையும் ஒன்றிணைக்கிறது.
நிலப்பரப்பை கடந்து, ஆழ்ந்த நாகரிக பிணைப்பை வளர்க்கிறது. பிரதமர் நரேந்திர மோடியால் 2022ல் துவக்கி வைக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம், இந்த ஆண்டு மூன்றா-வது கலாசார நிகழ்வாக நடக்கிறது.
சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக, மத்திய அரசால் துவக்கப்பட்ட இந்த முன்முயற்சி, 'ஒரே இந்தியா உன்னத இந்தியா' என்ற உணர்வை கொண்டுள்ளது. 'காசி தமிழ் சங்கமம் - 3.0' தமிழகத்தின் உயிரோட்டமான வளமான பாரம்பரியம், வாரணாசியின் காலத்தால் அழியாத மரபுகள் போன்றவற்றை வலுப்படுத்துகிறது.
நம் நாட்டின் மதிக்கத்தக்க முனிவரான மகரிஷி அகத்தியரை, இந்த மூன்றாம் ஆண்டு நிகழ்வு நினைவுகூரும் என, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
மகரிஷி அகத்தியரின் ஞானம், தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றுக்கு அடித்தளம் அமைத்திருப்பதோடு, மாண்புகளையும், அறிவு பாரம்பரியத்தையும் பகிர்ந்து வழங்கியுள்ளது.
அயோத்தியில், ஸ்ரீ ராமபிரானின் பிராணப் பிரதிஷ்டைக்கு பிறகு நடக்கும் முதலாவது சங்கமம் என்பதுடன், மகா கும்பமேளாவுடன் இணைந்தது என்பதால், இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தனி முக்கியத்துவம் பெறுகிறது.
1,000 பிரதிநிதிகள்
இந்த சங்கமத்திற்கு தமிழகத்தில் இருந்து, 1,000 பிரதிநிதிகளை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மத்திய பல்கலைகளை சேர்ந்த 200 தமிழ் வம்சாவளி மாணவர்களும், இந்த நிகழ்வில் இணைய உள்ளனர்.
இளைஞர்கள் பங்கேற்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். இதில், பங்கேற்போர் நடன நிகழ்வுகள், இசை, காசியையும், தமிழகத்தையும் சேர்ந்த அழகிய கலைக்கண்காட்சி போன்றவற்றை கண்டுகளிப்பர்.
ஆதி சங்கராச்சாரியார் முதல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வரை, தமிழ் கலாசார தடங்கள், காசியில் ஆழப்பதிந்து நீடித்து வருகின்றன. தமிழகத்தின் மகத்தான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மகாகவி பாரதியாரின் இல்லம் அமைந்துள்ள, காசியின் அனுமன் படித்துறை, புனித யாத்திரை தலமாக உள்ளது.
இதே அனுமன் படித்துறையில், 17ம் நுாற்றாண்டில் குமரகுருபர தேசிகர், குமாரசாமி மடத்தை நிறுவியது, காசியுடனான தமிழர்களின் பிணைப்பை வெளிப்படுத்துகிறது.
நகரத்தார் சத்திரம்
கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக, காசி விஸ்வநாதர் ஆலயத்தில், ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் பலவகையான வசதிகளை செய்து தருகிறது.
பிரதமர் மோடி, தமிழ் கலாசாரத்தின் மீது ஒப்புமை இல்லாத அர்ப்பணிப்பை கொண்டுள்ளார். சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையத்தை அமைத்ததன் வழியே தமிழர்களின் வரலாற்று பாதுகாப்பிலும், கவுரவிப்பிலும், அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜகார்த்தா முருகன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் அவரது ஈடுபாடு, இதனை மேலும் உறுதி செய்கிறது.
கடந்த 2023ல் வாரணாசியில், காசி தமிழ் சங்கமத்தை துவங்கிய போது, கன்னியாகுமரி - வாரணாசி தமிழ் சங்கம ரயில் போக்குவரத்தையும் பிரதமர் துவக்கினார்.
கலாசார பாதை
திருக்குறள், மணிமேகலை மற்றும் பிற செவ்வியல் இலக்கிய படைப்புகளின் பிரெய்லி மொழியாக்கத்தையும் வெளியிட்டார். குஜராத்தி மொழியில் திருக்குறளையும் வெளியிட்டார்.
பிரதமரின் இத்தகைய முன்முயற்சிகள், தமிழகத்துடன் அவருக்குள்ள ஆழ்ந்த பிணைப்பையும், அதன் வளமான கலாசாரத்தையும் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான இந்தியாவின் பரந்த உறுதிப்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன.
பிரதமர் மோடி தலைமையின் கீழ், நம் தேசத்தின் வரலாற்றில் அனைத்து மொழி, பாரம்பரியம், சமூகம் ஆகியவற்றுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதை உறுதிசெய்து அனைவரையும் உள்ளடக்கிய கலாசார பாதையில், இந்தியா தொடர்ந்து நடைபோடுகிறது.
காசி தமிழ் சங்கமம் - 2025-ஐ, நாம் கொண்டாடும் நிலையில், நம் பன்முகத்தன்மை, போற்றுதலுக்கு உரிய பொக்கிஷமாக உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
காசி - தமிழகம் இடையிலான ஒற்றுமை, பாரதத்தின் ஒற்றுமையாகும். இதனை இன்று மட்டுமல்ல, எப்போதும் கொண்டாடுவோம்.