ADDED : மார் 28, 2024 03:49 AM

சு.ஸ்ரீனிவாசன், கோவையில் இருந்து எழுதுகிறார்:
தற்போதைய ஊழலில் நம் நாட்டில் எப்போது தேர்தல்கள் வந்தாலும், வாக்காளர்களுக்கு பல்வேறு விதங்களில் லஞ்சம் கொடுத்து அவர்களது ஓட்டுகளை பெறும் போக்கு தான் நடைமுறை என்றாகி விட்டது.
லஞ்சம் கொடுப்பது, சட்டப்பூர்வமாகி விட்டதோ என்றளவு, அது சகஜமாகி விட்டது.
அரசு தன் இலவசமான அன்பளிப்புகள் வாயிலாகவும், கவர்ச்சிகரமான சலுகைகள் வாயிலாகவும் ஆளுங்கட்சி என்ற வகையில் சட்டப்பூர்வமாகவும், லஞ்சத்தை கொடுக்கையில், எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் போட்டி போட்டு, தம் மாயாவி வழிகள் வாயிலாக சட்டத்துக்கு புறம்பாக லஞ்சம் கொடுக்கின்றனர்.
யார் அதிகமாக லஞ்சம் கொடுக்கின்றனரோ, அவர்களுக்கு வாக்காளர்கள் ஓட்டு போட்டு, வெற்றி பெற செய்து விடுகின்றனர்.
இவ்வாறு லஞ்சம் கொடுத்து ஆட்சிக்கு வருபவர்களிடம் நாம் எந்த விதமான நேர்மையை அல்லது நியாயத்தை எதிர்பார்க்க இயலும்? வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில், லஞ்சத்துக்காக ஓட்டளித்து விட்டு அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளும் துன்பச்சூழலில் ஏன் உழல வேண்டும்?
இப்படியே இது தொடர்ந்தால், நம் நாட்டின் எதிர்காலம் மிகவும் கேவலமான நிலையை எட்டிவிடும் என்பது நிச்சயம்.
ஆகவே யார் லஞ்சம் கொடுத்தாலும் அதை வாங்கிக் கொண்டு, வாக்காளப் பெருமக்கள் தங்களின் மனசாட்சி சொல்லும் நல்ல வேட்பாளர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அதுவே நல்லாட்சிக்கு வழி வகுக்கும்.
வேட்பாளர்கள் தரும் லஞ்சத்தை வாங்க மறுத்தால், பலவீனப்பட்ட வாக்காளர்கள் விரும்பத்தகாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகையால், லஞ்சத்தை வாங்கிக் கொண்டு, அவரவர் தத்தம் இஷ்டப்படியான வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் தான், நம் நாடு உருப்படும்.

