பதவி உயர்வுக்கு காத்திருப்பு இன்ஸ்பெக்டர்கள் கடிதம்
பதவி உயர்வுக்கு காத்திருப்பு இன்ஸ்பெக்டர்கள் கடிதம்
ADDED : மே 01, 2025 12:38 AM
சென்னை:காவல் துறையில் எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் நிலையில், இன்ஸ்பெக்டர் என்ற ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டு இருப்பதாக, 91 பேர் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது:
கடந்த, 1994ல், போலீஸ் எஸ்.ஐ.,க்களாக, 1,198 பேர் தேர்வு செய்யப்பட்டோம். அந்த ஆண்டு போதிய வசதிகள் இல்லை என, 500 பேரும், அதற்கு அடுத்த ஆண்டில், 600 பேரும் பயிற்சிக்கு அனுப்பப்பட்டோம். மீதமிருந்த, 98 பேருக்கு ஆறு ஆண்டுகள் கழித்து, 2000வது ஆண்டில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, 1997ல், 1,000 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட்டு, 1999 மற்றும் 2000ம் ஆண்டில் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு முறையாக இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., என, பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
ஆனால், பயிற்சிக்கு தாமதமாக அனுப்பப்பட்ட 98 பேருக்கு, இன்ஸ்பெக்டர் என்ற ஒரே ஒரு பதவி உயர்வு மட்டும் வழங்கப்பட்டது. பதவி உயர்வுக்காக நீதிமன்றத்தை நாடினோம்.
அதற்கான விசாரணையை காரணமாகக் கூறி, நாங்கள், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த போதிலும், எங்களுக்கு நியாயமாக தர வேண்டிய, பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
ஏழு பேர் பணி ஓய்வு பெற்று விட்டனர். மற்றவர்களுக்கு பதவி உயர்வு தர வேண்டும் என, அரசுக்கும், டி.ஜி.பி.,க்கும் கடிதம் எழுதி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.