பெயரளவில் நடக்குதா கால்நடை கணக்கெடுப்பு; வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம்
பெயரளவில் நடக்குதா கால்நடை கணக்கெடுப்பு; வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம்
ADDED : ஜன 15, 2025 12:27 AM
விருதுநகர்; தமிழகத்தில் நடந்து வரும் கால்நடை கணக்கெடுப்பில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் முழுவீச்சில் நடப்பதில்லை என்றும், பிப்ரவரி மாதத்தில் முடிய உள்ளதால் துரிதப்படுத்தி அனைத்து வகை கால்நடைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 21வது கால்நடைகள் கணக்கெடுப்பு அக். இறுதியில் துவங்கி பிப். முதல் வாரம் வரை நடக்கிறது. நாட்டில் 53.6 கோடி கால்நடைகள் உள்ளதாக மத்திய கால்நடை பராமரித்துறை அமைச்சகம் கூறுகிறது. இந்த கால்நடை கணக்கெடுப்பு பல முக்கியமான தகவல்களை அரசுக்கு வழங்குவதுடன், கொள்கை வகுப்பது, நிதி ஒதுக்கீடு போன்றவற்றுக்கும் உதவிகரமாக அமையும்.
தமிழகத்தில் நடந்து வரும் கணக்கெடுப்பில் 38 மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் 1500 மேற்பார்வையாளர்கள், 6700 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்டமாக கண்காணிக்கப்படுகிறது. கால்நடை வளர்ப்போர் தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.
ஆனால் இந்த கணக்கெடுப்பு பெயரளவில் நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் கள பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. நாட்டு மாடு, மலையில் மேயும் கிடை மாடு, ஆடுகள், நாட்டு பன்றி, வாத்து உள்ளிட்டவையும் கணக்கில் விடுபடுகிறது என்கின்றனர். மலையடிவார பகுதிகளான தேனி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் மலையில் மேயும் கிடை மாடுகள், ஆடுகள் அதிகம் உள்ளன.
கால்நடைகளின் எண்ணிக்கை மிக மிக முக்கியம். மத்திய அரசின் திட்டங்களுக்கு இதுதான் அடிப்படை. வனத்துறையில் பறவைகள் கணக்கெடுப்பு எடுக்கும் போது தன்னார்வ அமைப்புகளை பயன்படுத்துவது போல் இதிலும் தன்னார்வ அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.