கால்நடைகளுக்கான காப்பீடு திட்டம் விழிப்புணர்வு இல்லாததால் முடங்கும் அபாயம்
கால்நடைகளுக்கான காப்பீடு திட்டம் விழிப்புணர்வு இல்லாததால் முடங்கும் அபாயம்
ADDED : ஜன 16, 2026 08:03 AM

ஈரோடு: கால்நடைகளுக்கான காப்பீடு திட்டம் பற்றி, விழிப்புணர்வு இல்லாததால் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, கால்நடை துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒரு கன்று ஈன்று பால் கறக்கும் மாடுகள், கறவை வற்றிய மற்றும் கர்ப்ப காலத்தில் உள்ள அனைத்து உள்நாட்டு, கலப்பின, அயலின வகை கறவை பசுக்கள், எருமைகளுக்கு காப்பீடு செய்யலாம்.
காப்பீடு செய்யப்படும் பசு, எருமையின் வயது, 2.5 முதல், 8 வயது வரையாகும். தவிர, 1 முதல், 3 வயது செம்மறியாடு, வெள்ளாடும், காப்பீடு செய்யப்படுகிறது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சம், 5 கால்நடைகளுக்கு காப்பீடு செய்யலாம்.
உதாரணமாக, 40,000 ரூபாய் மதிப்பு மாட்டுக்கு மானியம், 85 சதவீதம் நீங்கலாக, 680 ரூபாய், சில திட்டத்தில், 35,000 ரூபாய் மதிப்பு மாட்டுக்கு மானியம் தவிர, 700 ரூபாய் செலுத்த நேரிடும். காப்பீடு திட்டத்தில் சேர விரும்புவோர், அந்தந்த கால்நடை மருத்துவமனை, கா ல்நடை வளர்ச்சி துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள உரிமையாளர்கள், 30 சதவீத பிரிமியம், வறுமை கோட்டுக்கு மேல் உள்ளோர், 50 சதவீதம் பிரிமியம் செலுத்த வேண்டும்.
கால்நடை இறந்தால், ஒரு நாளைக்குள் காப்பீடு பெற்ற நிறுவனம் அல்லது கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இறப்புக்கான பிரேத பரிசோதனை அறிக்கை சமர்பித்து, காப்பீடு ரசீது இணைத்து, 15 நாளில் இழப்பீடு பெறலாம்.
இவ்வாறு கூறினர்.
இதுபற்றி, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு கூறுகையில், ''கறவை மாடுகள், 50,000 முதல், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை. திடீரென மாடுகள் இறந்தால், பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. காப்பீடு திட்டம் பற்றி கால்நடை வளர்ப்போர், விவசாயிகளுக்கு தெரியவில்லை. மாடு வாங்கிய ரசீது கட்டாயம். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், கீழ் வராதோருக்கு காப்பீடு தொகை வித்தியாசம். ஒரு குடும்பத்தில், 5 கால்நடை மட்டுமே காப்பீடு செய்யலாம் என்ற நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும்போதே, விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்,'' என்றார்.

