UPDATED : ஏப் 10, 2024 09:05 AM
ADDED : ஏப் 10, 2024 12:02 AM

சென்னை : சென்னையில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்ற, 'ரோடு ஷோ ' மிக வெற்றிகரமாக நடந்தது, பா.ஜ., கூட்டணி கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி, இளம் தலைமுறையினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, வழிநெடுகிலும் மலர் துாவி, பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லோக்சபா தேர்தலில் இம்முறை, 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பது, பா.ஜ.,வின் இலக்காக உள்ளது. அதிலும், தமிழகத்தில் கணிசமான வெற்றியை பெற வேண்டும் என்பது, பா.ஜ., தலைவர்களின் லட்சியம்.
அதற்காக பா.ஜ., தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு, அக்கட்சி, 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மூன்று தொகுதிகளில், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெற முடியாது என்ற எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை தகர்க்க வேண்டும் என்பதற்காக, மக்களிடம் பிரபலமானவர்களை, முக்கிய தொகுதி களின் வேட்பாளர்களாக பா.ஜ., தலைமை களம் இறக்கி உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன், பல்வேறு இடங்களில் பா.ஜ., தரப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அவற்றில், பிரதமர் மோடி பங்கேற்றார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், பா.ஜ., சார்பில் முக்கிய நகரங்களில், 'ரோடுஷோ' நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், ஏற்கனவே கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நடத்தப்பட்டது. சென்னையில் நேற்று ரோடு ஷோ நடந்தது.
வரவேற்பு
இதில், பங்கேற்பதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம் கோண்டியா விமான நிலையத்திலிருந்து, தனி விமானத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை, 5:50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து வந்த பிரதமரை, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். மாலை, 6:05 மணிக்கு, அவரது வாகனம் விமான நிலையத்திலிருந்து, தி.நகர் பாண்டி பஜாரை நோக்கி புறப்பட்டது. அவரது வாகனத்தின் முன்பும், பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து வந்தன.
மகிழ்ச்சி
சாலையின் இரு புறங்களிலும் நின்ற மக்களை பார்த்து, பிரதமர் கை அசைத்தபடி வந்தார். மத்திய பா.ஜ., அரசு அறிமுகப்படுத்திய, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், சாலை அகலப்படுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்ட பாண்டி பஜாரில் ரோடு ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாண்டி பஜார் வந்த பிரதமருக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் வரும் முன், ஒலிப்பெருக்கியில் நாதஸ்வர இசை ஒலிபரப்பப்பட்டது. பாண்டி பஜார் வந்ததும், காரிலிருந்து இறங்கிய பிரதமர், தென்சென்னை பா.ஜ., வேட்பாளரான, முன்னாள் கவர்னர் தமிழிசை மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளிடம் நலம் விசாரித்தார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வட சென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
அதன்பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி புறப்பட்டார். வாகனத்தில் அண்ணாமலை மற்றும் சென்னை வேட்பாளர்கள் உடன் சென்றனர். சாலையின் இரு புறங்களிலும் திரண்டு நின்ற, பல்லாயிரக்கணக்கான மக்களை பார்த்து, தாமரை சின்னத்தை காண்பித்தபடி, பிரதமர் மக்களின் வரவேற்பை ஏற்றார். கல்லுாரி பெண்களும், இளைஞர்களும் ஏராளமாகத் திரண்டு உற்சாகமாக கையசைத்து, மகிழ்ச்சியில் கோஷம் எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.
வழியில், கடவுள் வேடமிட்ட கலைஞர்கள் வரவேற்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. பலர் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தனர். அந்த குழந்தைகளும் பிரதமர் மோடியை பார்த்ததும், கையசைத்து தங்களின் மகிழச்சியை வெளிப்படுத்தின.
பெண்கள், மோடி படம் அச்சிடப்பட்ட பதாகைகளை பிடித்தபடி நடனமாடினர். பேரணி நடந்த பாண்டி பஜார் வீதி முழுதும் பா.ஜ., கொடிகள் கட்டப்பட்டிருந்தன. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பெரும்பாலான இளம் தலைமுறையினர், 'நாங்கள் மோடியின் குடும்பம்' என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி நின்றனர். 'மீண்டும் மோடி; வேண்டும் மோடி, பாரத் மாதா கீ ஜே' என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வாகனத்தில் வந்த பிரதமர் மீது, சாலையின் இரு புறங்களிலும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை துாவி வரவேற்றனர். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்ட கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர்.
பிரசாரம்
'தாமரை சின்னத்தில் ஓட்டளிப்போம்; தமிழகத்தில் தாமரையை மலர செய்வோம்' என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. சிலர் அலங்கார குடைகளுடன் வரவேற்பு அளித்தனர். இரவு 7:10 மணிக்கு ரோடு ஷோ நிறைவடைந்தது. மொத்தம், 1.5 கி.மீ., துாரம் நடந்தது.
வாகனத்திலிருந்து இறங்கிய பிரதமர், பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். வேட்பாளர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். சில நிமிடங்கள் அண்ணாமலையுடன் உரையாடினார்.
அதன்பின் பிரதமர் மோடி, இரவு, 7:35 மணிக்கு காரில் கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரை கவர்னர் ரவி வரவேற்றார்; இரவு, கவர்னர் மாளிகையில் பிரதமர் ஓய்வெடுத்தார்.
இன்று காலை, 9:00 மணிக்கு காரில் விமான நிலையம் செல்லும் பிரதமர், 9:20 மணிக்கு பழைய விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் வேலுார் செல்கிறார். அங்கு காலை, 10:15 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.
கூட்டம் முடிந்து காலை, 11:15 மணிக்கு வேலுாரில் இருந்து ஹெலிகாப்டரில் அரக்கோணம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானத்தில், மதியம், 12:50 மணிக்கு கோவை விமான நிலையம் செல்கிறார். அதன்பின், தனி ஹெலிகாப்டரில் மதியம் 1:20 மணிக்கு, கோவை மேட்டுப்பாளையம் செல்கிறார். அங்கு பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மதியம், 2:20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார்.
அங்கிருந்து மாலை, 5:00 மணிக்கு விமானத்தில் மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் விமான நிலையம் செல்கிறார். இதையொட்டி, பிரதமர் செல்லும் பகுதிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் ரோடு ஷோ வெற்றிகரமாக நடந்து முடிந்தது, பா.ஜ.,வினருக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


