ராமதூதனே! அஞ்சனை மைந்தனே! எங்களுக்கு அருள் செய்வாயாக! இன்று (ஜன. 11, 2024) - அனுமன் ஜெயந்தி
ராமதூதனே! அஞ்சனை மைந்தனே! எங்களுக்கு அருள் செய்வாயாக! இன்று (ஜன. 11, 2024) - அனுமன் ஜெயந்தி
ADDED : ஜன 10, 2024 11:54 PM

அவதரித்தார் அனுமன்
குஞ்சரன் என்பவர் குழந்தை வேண்டி தவம் இருந்தார். பலனாக அங்கு தோன்றிய சிவபெருமான், 'நல்ல குணம் கொண்ட மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றுவான். அவன் வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான். உலகமே கொண்டாடும் விதத்தில் அவனது செயல் அமையும்' என்று வரத்தை கொடுத்தார்.
அதன்படி குஞ்சரனுக்கு பிறந்த மகள்தான் அஞ்சனை. அவள் மணப்பருவம் அடைந்ததும் கேசரி என்னும் வானர மன்னரை மணந்தாள். நல்ல குணமும் பக்தியும் கொண்டவளான இவளுக்கு மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அவதரித்தார் அனுமன்.
தாரகமந்திரம்
அனுமன் ஜெயந்தியன்று விரதம் இருந்தால் வேண்டிய வரத்தை பெறலாம். அன்று பெருமாள், அனுமனை தரிசியுங்கள். 'ஸ்ரீராமஜெயம்' என்னும் தாரகமந்திரத்தை 108, அல்லது 1008 முறை எழுதுங்கள். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படையுங்கள். பின் மாலையில் மீண்டும் கோயிலுக்கு சென்று பெருமாள், அனுமனுக்கு துளசி, வெற்றிலை மாலையை சாத்துங்கள்.
அனுமனும் ஸ்ரீராமனும்
தசரத மகாராஜா குழந்தை இல்லாமல் தவித்தார். அப்போது முனிவர்களின் வழிகாட்டுதல்படி 'புத்திரகாமேஷ்டி' யாகம் நடத்தினார். அதில் கிடைத்த பாயாசத்தை தன் மூன்று மனைவிகளுக்கு கொடுத்தார். ராம சகோதரர்களும் பிறந்தனர். வாயுபகவான் இதன் ஒரு பகுதியை அஞ்சனையிடம் கொடுத்தார்.
அவளும் அனுமனை பெற்றெடுத்தாள். இதனால் ஸ்ரீராமபிரானும் அனுமனும் சம வலிமை உள்ளவர்களாக உள்ளனர் என மராட்டிய மன்னர் சிவாஜியின் குரு ராமதாசர் கூறியுள்ளார்.
பல வடிவம் கொண்டவர் அனுமனுக்கு பல வடிவில் சிலைகள் உண்டு. அவர் இரண்டு கைகளையும் இணைத்து கூப்பி தலைமேல் வைத்து வணங்கும்
நிலையில் இருப்பவர் பக்த அனுமன். கூப்பிய கையை மார்புக்கு நேராக வைத்திருந்தால் அபயஹஸ்த அனுமன்.
ஒரு கையில் கதையும் மற்றொரு கையில் சஞ்சீவி மலையும் கொண்டிருந்தால் வீர அனுமன். ராமனை தன்தோள் மீது சுமந்தபடி ஐந்து முகங்கள் கொண்டிருந்தால் பஞ்சமுக ஆஞ்சநேயர். பத்து கைகளை கொண்டிருந்தால்
தசபுஜ ஆஞ்சநேயர். எல்லாம் இவரேபல பெருமைகளுக்கு சொந்தக்காரர் அனுமன்.
* ஆசைகளை துறந்தவர்.
* துாய மனம் படைத்தவர்.
* சிவ அம்சம் பெற்றவர்.
* சுக்ரீவன் ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராக இருந்து நாட்டைக் காத்தவர்.
* ஸ்ரீராமபிரான் தன் மனைவி சீதையை இழந்து தவித்தபோது, அவருடன் உடனிருந்து அன்பு செய்த உத்தமர்.
* கற்புக்கரசியாக திகழும் சீதை இலங்கையில்தான் உள்ளார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியவர்.
* வலிமையான வில்லை ஏந்திய ஸ்ரீராமபிரானின் துாதன் என்று விஸ்வரூபம் காட்டி சீதைக்கு தரிசனம் தந்தவர்.
* ராவணனின் மகனான இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் அனைவரும் மூர்ச்சித்து விழுந்தபோது சஞ்சீவிமலையைக் கொண்டு வந்து உயிரைக் காப்பாற்றியவர்.
* நந்திக்கிராமத்தில் ஸ்ரீராமபிரான் வெற்றியுடன் ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார் என பரதனிடம் அறிவித்த அறிவாளன்.
* ஆற்றல், அறிவு, செயல்திறன், வீரம், விவேகம், வாக்கு சாதுர்யம், முயற்சி, தன்னடக்கம், ராமபக்தி போன்ற நல்ல பண்புகளுக்கு சொந்தக்காரர்.
n சீதையின் திருவாக்கால் சிரஞ்சீவி பட்டம்பெற்று இன்றும் பக்தர்களின் குறைகளை தீர்க்கும் தயாளமூர்த்தி.
வெற்றிக்கான ஸ்லோகம்
போட்டி என்றால் ஒருவருக்கு வெற்றியும், தோல்வியும் வரும். அதாவது ஒருவர் பெறும் வெற்றியே மற்றொருவருக்கு தோல்வியாக மாறுகிறது. இந்த வெற்றியாளராக திகழ வேண்டும் என்றால் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்.
'அஸாத்ய ஸாதக ஸ்வாமி அஸாத்யம்
தவகிம்வதராமதுாத க்ருபா ஸிந்தோ
மத் கார்யம் ஸாதயப்ரபோ
இதை ஜபித்துக்கொண்டே
வந்தால் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவது உறுதி.
வாழ்க்கை இனிக்க...
அனுமனைப்பற்றிய துதிகளில் மிகவும் முக்கியமானது கவிச்சக்கரவர்த்தியான கம்பர் கொடுத்ததாகும். அதை சொல்வோருக்கு வாழ்க்கையே இனிப்பாகும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே
ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன்
எம்மை அளித்துக் காப்பான்
குருவருள் பெறுவோம்
குருவின் அருள் இருந்தால் திருவாகிய கடவுளின் அருள் தானாகவே கிடைக்கும். மந்த்ராலய மகானாகிய ராகவேந்திரர் ஸ்வாமி அருளிய மந்திரத்தை படித்தால் ஒருவரது தீயவினைகள் போகும். ராகவேந்திரர், அனுமன், ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது ஆசியையும் பெறலாம்.
யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ -
பலாத் தீர்ணாம்புதிர் லிலயா
லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராம -
தயிதாம் - புங்க்த்வா வனம் ராஷஸான்
அக்ஷாதீன் விநிஹத்ய விஷ்ய தசகம்
தக்த்வா - புரீம் தாம் புந:
தீர்ணாப்தி கபிபிர்யுதோ யம் அநுமத் தம்
- ராம சந்திரம் பஜே