தி.மு.க.,வுக்கு ரூ.509 கோடி நன்கொடை வாரி வழங்கிய லாட்டரி மார்ட்டின் நிறுவனம்
தி.மு.க.,வுக்கு ரூ.509 கோடி நன்கொடை வாரி வழங்கிய லாட்டரி மார்ட்டின் நிறுவனம்
ADDED : மார் 18, 2024 12:50 AM

புதுடில்லி: தேர்தல் பத்திரங்கள் வாயிலாக தி.மு.க.,வுக்கு, 656 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில், லாட்டரி மார்ட்டின் மட்டும், 509 கோடி ரூபாயை தாராளமாக வழங்கியுள்ளார். தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய தகவல்களில், இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு 6.05 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.
'தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும், இந்த திட்டத்தைச் செயல்படுத்திய, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
டிஜிட்டல் தகவல்
அதன்படி, தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில், எந்த தொகைக்கு, யாரால் வாங்கப்பட்டன என்ற தகவல் வெளியிடப்பட்டது.
அதுபோல, கட்சி களுக்கு கிடைத்த நன்கொடை தொடர்பான விபரங்களும் தனியாக வெளியிடப்பட்டன. ஒரு பத்திரம் யாரால் வாங்கப்பட்டது, அது எந்தக் கட்சிக்கு வழங்கப் பட்டது, தேர்தல் பத்திரங்களின் எண் உள்ளிட்ட தகவல்களை வெளியிடும்படி உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், சீலிடப்பட்ட உறையில் இருந்த, எஸ்.பி.ஐ., ஏற்கனவே அளித்த தகவல்கள் மற்றும் டிஜிட்டல் தகவல்களை, உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தது.
அதனடிப்படையில், புதிய தகவல்களை தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் நேற்று பதிவு செய்தது. இந்த தகவல்கள், கடந்த ஆண்டு நவம்பரில் அங்கீகாரம் பெற்ற, அங்கீகாரம் பெறாத, 523 கட்சிகள் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்து உள்ளன.
அறிக்கை
கடந்த 2018ல் தேர்தல் பத்திரங்கள் திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து பெறப்பட்ட நன்கொடை விபரங்களும் இதில் இடம் பெற்றிருக்கக் கூடும் என்று தெரிகிறது.
தி.மு.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே, நன்கொடை வழங்கியவர்களின் விபரங்களை, இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. மற்ற கட்சிகள், இந்த      தொடர்ச்சி 11ம் பக்கம்
நன்கொடையாளர்கள் விபரத்தை தெரிவிக்கவில்லை.
தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது:
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, பா.ஜ.,வுக்கு அதிகபட்சமாக 6,986.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதற்கடுத்ததாக, மேற்கு வங்கத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசுக்கு 1,397 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 1,334 கோடி ரூபாயும், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு 1,322 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. ஒடிசாவில் ஆளும் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு, 944.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அதிக நன்கொடை பெற்ற கட்சிகள் பட்டியலில், தமிழகத்தில் ஆளும் தி.மு.க., ஆறாவது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு, 656.6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்.,குக்கு 442.8 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 89.75 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு அதிகளவில் நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலில், லாட்டரி மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம், 1,368 கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ளது. இதில், 509 கோடி ரூபாயை தி.மு.க.,வுக்கு நன்கொடையாக அளித்துள்ளது.
தி.மு.க.,வுக்கு நன்கொடை அளித்தோர் பட்டியலில், 105 கோடி ரூபாயுடன் மேகா இன்ஜினியரிங், 14 கோடி ரூபாயுடன் இண்டியா சிமென்ட் ஆகியவையும் உள்ளன. இந்த புதிய பட்டியலின்படி, அ.தி.மு.க.,வுக்கு 6.05 கோடி ரூபாய் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கிடைத்துள்ளது.

