அன்பு ஒன்றுதான் எதிர் துருவங்களையும் இணைக்கும்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு
அன்பு ஒன்றுதான் எதிர் துருவங்களையும் இணைக்கும்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு
ADDED : ஜன 25, 2026 10:03 PM

மதுரை: 'அன்பு ஒன்றுதான் எதிர்துருவங்களாக இருப்போரையும் இணைத்து ஒரே இடத்தில் நிற்க வைக்கும்' என மதுரையில் நடந்த பிரம்மா குமாரிகள் மண்டல பொன்விழாவில் உயர்நீதி மன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.
பிரம்மா குமாரிகள் மதுரை துணை மண்டல பொன்விழா தமுக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் கூடுதல் தலைமை நிர்வாகி பிரம்மா குமாரி ஜெயந்தி திதி (மவுண்ட் அபு) ஆசி வழங்கி பேசினார். அமைச்சர் மூர்த்தி, உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கூடுதல் பொதுச் செயலாளர் மிருத்யுஞ்சயா, தருமை ஆதினம், துணை மேயர் நாகராஜன், கார்த்திகேயன், லட்சுமி, உமா பங்கேற்றனர்.
நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் பேசியதாவது: நீதிமன்றத்தில் சித்தார்த்தன் என்ற அரசு வழக்கறிஞரும் பணி செய்தார். சில வாரங்களுக்கு முன்பு மேலுார் விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றேன். அவர் திராவிடர் கழக அமைப்பை சேர்ந்தவர்.
எனவே அந்த அமைப்பின் தலைவர் வீரமணியும் வந்திருந்தார். எதிரெதிர் துருவங்களான நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் நின்றோம்; பேசினோம்; சென்றோம். ஒரு வாரம் கழித்து, எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் என்னிடம் பேசுகையில், சித்தார்த்தன் மீது வீரமணிக்கு ஒரு அன்பு, அதேபோல் உங்களுக்கும் சித்தார்த்தன் மீது ஒரு அன்பு, இந்த அன்பு என்ற ஒன்றே எதிரெதிர் துருவங்களான உங்கள் இருவரையும் ஒரே இடத்தில் நிற்க வைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
அன்பு என்ற ஒன்றை பரப்பவே பிரம்மா குமாரிகள் சங்கம் இயங்குகிறது என்று நான் நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி சுவாமிநாதன் பேசினார்.

