திருப்பரங்குன்றம் மலைமீது செல்ல மதுரை ஆதினத்திற்கு மீண்டும் தடை
திருப்பரங்குன்றம் மலைமீது செல்ல மதுரை ஆதினத்திற்கு மீண்டும் தடை
ADDED : ஜன 27, 2025 04:23 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பழனிஆண்டவர், மலை மேல் உள்ள காசி விஸ்வநாதரை வழிபட மதுரை ஆதினத்திற்கு நேற்று 2வது நாளாக போலீசார் தடை விதித்தனர்.
மதுரை ஆதினம் நேற்று முன்தினம் சுவாமி தரிசனத்திற்காக திருப்பரங்குன்றம் வருவதாக இருந்தது. அவருக்கு போலீசார் தடை விதித்தனர். ஆதினத்தின் பாதுகாப்பு கருதிதான் தடை விதிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதைக்கண்டித்து ஹிந்து முன்னணி, பா.ஜ., வினர் ஆதினம் மடத்தின் முன் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை 9:00 மணிக்கு மதுரை ஆதினம் மீண்டும் திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர், மலை மேல் காசி விஸ்வநாதரை வழிபட வருவதாக தகவல் வெளியானது. திருப்பரங்குன்றம் செல்ல மதுரை ஆதினத்திற்கு போலீசார் மீண்டும் தடை விதித்தனர். இதனால் நேற்றும் அவர் திருப்பரங்குன்றம் வரவில்லை.
கந்தர்மலை பாதுகாப்பு இயக்கம், திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், திருப்பரங்குன்றம் முருக பக்தர்கள் கூறியதாவது:
ஒரு மடாதிபதி ஹிந்து தெய்வங்களை வழிபடுவதற்கு தடை விதிக்கப்படுவது ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல். அவர் சுவாமி தரிசனம் செய்வதற்காகவே வருவதாக இருந்தது.
அவர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவா வருவார். ஆதினத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கி அவரை தரிசனம் செய்ய போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு தடை விதிப்பது எந்த விதத்தில் நியாயம்.
திருப்பரங்குன்றத்தில் முஸ்லிம் எம்.எல்.ஏ., எம்.பி., களுக்கு அனுமதி அளிக்கும் போலீசார், ஆதினத்திற்கு அனுமதி மறுப்பது ஹிந்து மதத்திற்கு இழைத்த பெரிய அநீதி. இந்நிலைத் தொடர்ந்தால் ஹிந்துக்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
சுவாமி தரிசனம் செய்ய மதுரை ஆதினத்திற்கு தடை விதித்ததற்கு கண்டனம், எதிர்ப்பை தெரிவிக்கிறோம். தடை தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தில் உள்ள ஆதினங்கள், ஆன்மிகப் பெரியோர்களை ஒன்று திரட்டி மலைமீதுள்ள காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.

