ADDED : மே 21, 2025 10:36 AM
புதுச்சேரி: புதுச்சேரி வந்த மதுரை மாநகர் பா.ஜ., நிர்வாகி காரில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாநகர் பா.ஜ., ஊடக பிரிவு துணைத் தலைவர் முத்துவிக்னேஷ்வரன், 39. இவர், கடந்த 17ம் தேதி ஊடக பிரிவு மாவட்ட நிர்வாகிகள் வேல்பாண்டி, பாலசுப்ரமணி, சீனிவாசன், செந்தில் ஆகியோருடன் சென்னையில் நடக்க இருந்த கட்சி கூட்டத்திற்கு காரில் சென்றனர்.
கூட்டம் வேறு தேதிக்கு மாற்றப்பட்டதால், 5 பேரும் கடந்த 18 ம் தேதி, புதுச்சேரி வந்து, கோலாஸ் நகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
நேற்று முன்தினம் ஆரோவில் கடற்கரைக்கு சென்றுவிட்டு, இரவு 7:00 மணிக்கு விடுதி வந்தபோது, முத்து விக்னேஸ்வரன் காரிலேயே ஓய்வு எடுத்துவிட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, மற்ற 4 பேரும் அறைக்கு சென்றுவிட்டு, இரவு 9:30 மணிக்கு வந்து பார்த்தபோது, முத்து விக்னேஸ்வரன் காரில் எவ்வித அசைவும் இன்றி காணப்பட்டார்.
அவரை, மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து, அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.