ஒதுக்கிவைப்பு, கட்டப்பஞ்சாயத்து ஜாதி மோதலுக்கு வழிவகுக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை
ஒதுக்கிவைப்பு, கட்டப்பஞ்சாயத்து ஜாதி மோதலுக்கு வழிவகுக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை
ADDED : பிப் 23, 2024 02:40 AM
மதுரை: தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நடந்த கட்டப்பஞ்சாயத்து, ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க டி.எஸ்.பி., ஒருவரை நியமிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், விஸ்வநாதபேரி மதிவாணன், கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:
ராஜசிங்கம் என்பவரின் தந்தை 2022 மார்ச் 18ல் இறந்தார். இறுதி சடங்கிற்கு நண்பர்களுடன் சென்றேன். சிலர் எதிர்ப்பு தெரிவித்து, தகாத வார்த்தைகளால் திட்டினர். என்னையும், நண்பர்களையும் வெளியேற்றாவிடில், இறுதி சடங்கிற்கு ஒத்துழைக்க மாட்டோம் என, ராஜசிங்கத்திடம் வற்புறுத்தினர்.
பொய் வழக்கு
மறுநாள், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மன்னிப்பு கேட்கும்படி கூறினர். எனது தரப்பை சேர்ந்த அண்ணாசாமி, கிராம மக்கள் முன்னிலையில் மண்டியிட்டு வணங்கி மன்னிப்பு கோரினார். அபராதம், 10,000 ரூபாயாக குறைக்கப்பட்டது.
இதுபோல செய்யுமாறு ஞானசேகர் என்பவரிடம் கூறினர். அவர் மறுத்ததால் கிராமத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்.
சிலர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்தனர். வழக்கில் தொடர்புடையவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. வழக்கு விசாரணையை வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
சிவகிரி அருகே ராயகிரி சீனிவாசன் தாக்கல் செய்த மனு:
ராயகிரி பேரூராட்சி முன் 2015 ஜூலை 17ல் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினேன். சிலர் மிரட்டினர். சிவகிரி போலீசில் புகார் அளித்தேன்.
ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக என்னை மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஊரிலிருந்து விலக்கி வைத்தனர். கிராம மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்குமாறு கட்டாயப்படுத்தினர்.
வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் சிலர் மீது வழக்குப்பதிந்தனர். எங்களுக்கு எதிராக போலீசார் பொய் வழக்குப்பதிந்தனர்.
மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., தென்காசி கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
கொள்கை மீறல்
நீதிபதி சத்தி குமார் சுகுமார குரூப் பிறப்பித்த உத்தரவு:
சட்டத்தை நிர்வகிக்க நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சட்டத்தை அமல்படுத்த போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.
இச்சூழலில், கிராமங்களில் உள்ள ஒரு சிலர் தங்களை தலைவர்கள் என கருதி, மக்களை அடிமைகளாக கருதுகின்றனர். ஜாதி அமைப்பால் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்து அல்லது ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது அரசியலமைப்பின் கொள்கைகளை மீறுவதாகும்.
சிவகிரி போலீசில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணையை, வேறொரு விசாரணை அதிகாரிக்கு தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., மாற்ற வேண்டும்.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு பிரசாரம் நடத்த வேண்டும். இப்பிரச்னையில் கவனம் செலுத்தாவிடில், வகுப்புவாத மற்றும் ஜாதி மோதலுக்கு வழிவகுக்கும். கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டை விசாரிக்க டி.எஸ்.பி., பதவிக்கு குறையாத ஒருவரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., நியமிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.