மதுரை சித்திரை திருவிழா ஜோராக நடக்கும்: சேகர்பாபு அமைச்சர் சேகர்பாபு உத்தரவாதம்
மதுரை சித்திரை திருவிழா ஜோராக நடக்கும்: சேகர்பாபு அமைச்சர் சேகர்பாபு உத்தரவாதம்
ADDED : ஏப் 17, 2025 12:39 AM
சென்னை:''அனைத்து சிறப்பான ஏற்பாடுகளுடன், மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு, 'ஜேஜே' என்று நடக்கும்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
'மதுரை சித்திரை திருவிழாவை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, துணை தலைவர் உதயகுமார், செல்லுார் எம்.எல்.ஏ., ராஜு ஆகியோர், சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: சித்திரை திருவிழாவின் போது, லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் கூடுவர். மதுரையே ஜேஜே என்று இருக்கும். மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் இருப்பர். அப்படிப்பட்ட விழாவில், இரண்டு ஆண்டுகளாக விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. தல்லாகுளம் - கோரிப்பாளையம் சாலையில், மேம்பால கட்டுமான பணிக்கு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.
அங்கு இரும்பு கம்பிகள், கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற ஒரு மாதமாகும். சப்பரத்தில் சாமி வரும் போது லட்சக்கணக்கான மக்கள் கூடுவர் என்பதால், நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வைகை ஆற்றில் பாலம் கூடுதலாக கட்டப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஆற்றில் சாமி இறங்கும் இடத்தில், மண்வளம் கொள்ளை அடிக்கப்பட்டு குண்டும், குழியும் உருவாகியுள்ளன. நீர் திறக்கும் போது, அது மறைந்து விடும். சாமியை பார்க்கும் ஆர்வத்தில் பக்தர்கள் இறங்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
அமைச்சர் சேகர்பாபு: மதுரை சித்திரை திருவிழாவிற்காக, கடந்த, 11ம் தேதி ஒருங்கிணைப்பு கூட்டமும், 12ம் தேதி அறங்காவலர் குழு கூட்டமும் நடந்துள்ளது. துறையின் ஆணையர் நேரடியாக, 13ம் தேதி ஆய்வு செய்துள்ளார். அங்குள்ள மேம்பால கட்டுமான பொருட்களை, 30ம் தேதிக்குள் அகற்றுவதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த, 2020 மற்றும் 2021ம் ஆண்டு கொரோனா காலம் என்பதால், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கவில்லை. கடந்த, 2022ம் ஆண்டு நெரிசல் காரணமாக விரும்பத்தகாத சம்பவம் நடந்தது.
அதுபோல எதுவும் நடக்காமல், நடப்பாண்டு திருவிழா சிறப்பாக நடக்கும். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் போது, ரேடியோ அலைவரிசை அடையாள கார்டு வாயிலாக, 'ஸ்கேன்' செய்யப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோன்று, மதுரை திருக்கல்யாண நிகழ்விலும் பயன்படுத்த இருக்கிறோம்.
செல்லுார் ராஜு: சித்திரை திருவிழாவில் சாமி இறங்கும் இடத்தில், வி.ஐ.பி.,களுக்கு சாலை அமைத்து தருகின்றனர். இதனால், பக்தர்களால் சாமி இறங்குவதை பார்க்க முடியாமல் போகிறது.
இரண்டு ஆண்டுகளில், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். வி.ஐ.பி.,களுக்கு பாதை அமைக்கும் போது, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். இந்த திருவிழாவில் மது அருந்தியவர்களால் மோதல் ஏற்பட்டு கொலையும் நடந்துள்ளது. எனவே, திருவிழாவிற்காக மூன்று நாட்கள், 'டாஸ்மாக்' மதுக்கடைகளை அடைக்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: கடந்த ஆட்சிக் காலத்தில், எதெல்லாம் அவர் சொல்லி நடக்கவில்லையோ, அதையெல்லாம் இந்த ஆட்சியில் நடக்க வேண்டும் என்று செல்லுார் ராஜு எதிர்பார்க்கிறார். அனைத்து சிறப்பான ஏற்பாடுகளுடன் சித்திரை திருவிழா அவர் சொன்னது போல, 'ஜேஜே' என்று நடக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.