மதுரை தி.மு.க.,வில் எல்லை மாற்றி பதவி அமைச்சர் மூர்த்திக்கு மட்டும் சலுகை? தளபதி ஆதரவாளர்கள் கொந்தளிப்பு
மதுரை தி.மு.க.,வில் எல்லை மாற்றி பதவி அமைச்சர் மூர்த்திக்கு மட்டும் சலுகை? தளபதி ஆதரவாளர்கள் கொந்தளிப்பு
ADDED : அக் 24, 2025 01:10 AM
மதுரை: மதுரையில் தி.மு.க., தெற்கு மாவட்ட நிர்வாகியை வடக்கு மாவட்டத்திற்கு மாற்றி, அவருக்கு பதவியும் பெற்றுத் தந்துள்ளார் அமைச்சர் மூர்த்தி. இதுபோல் வடக்கு மாவட்டத்தில் உள்ள தளபதி ஆதரவாளர்கள், தங்களை மீண்டும் மாநகர் தி.மு.க.,விற்கு மாற்ற வேண்டும் என உட்கட்சிக்குள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
மதுரை தி.மு.க.,வில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலர்கள் தளபதி, எம்.எல்.ஏ., மணிமாறன் என 4 பேரின் ஆதரவாளர்களாக பிரிந்து கிடக்கின்றனர்.
மாநகர் தி.மு.க., செயலர் தளபதியிடம் இருந்த மதுரை மேற்கு சட்டசபை தொகுதியின் கட்சி நிர்வாகம், சில மாதங்களுக்கு முன் அமைச்சர் மூர்த்தியின் வடக்கு மாவட்ட நிர்வாக எல்லைக்குள் மாற்றப்பட்டது.
இதனால், மதுரை மேற்கு தொகுதி நிர்வாகிகள் தளபதி ஆதரவாளர்கள் என்பதால், மூர்த்திக்கு விசுவாசமாக இல்லை என்ற சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையே வரும் சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் வெற்றி பெறச் செய்து தருவதாக தி.மு.க., தலைமைக்கு மூர்த்தி உறுதியளித்துள்ளதால், கட்சி ரீதியில் மதுரை மேற்கு தொகுதியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என கேட்டு, தலைமையிடம் அனுமதியும் பெற்றார்.
இதனால் வட்டச் செயலர்கள் எண்ணிக்கையை 22ல் இருந்து 58 ஆகவும், பகுதி செயலர்கள் எண்ணிக்கையை 5ல் இருந்து 11 ஆகவும் உயர்த்தி, புதிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை மூர்த்தி நியமித்தார்.
தளபதியின் விசுவாசிகளில் 7 வட்டம், பகுதிச் செயலர்களுக்கு 'கல்தா' கொடுத்து, அவர்களுக்கு பகுதி உறுப்பினர்கள் என்ற 'டம்மி' பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட தளபதி ஆதரவாளர்கள், கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, மணிமாறன் வசம் உள்ள மதுரை தெற்கு மாவட்டத்தின், துணை செயலராக இருந்த பாலாஜியை, அங்கிருந்து வடக்கு மாவட்டத்திற்கு மாற்றி, தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியை அமைச்சர் மூர்த்தி பெற்றுத் தந்துள்ளார்.
இதை எப்படி தலைமை அனுமதித்தது என தளபதி ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.
தளபதி ஆதரவாளர்கள் கூறுகையில், ''ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு, கட்சியின் நிர்வாகியை மாற்றுவது புதிதாக உள்ளது.
''இதே பாணியில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., எல்லைக்குள் உள்ள எங்களை, மீண்டும் மாநகர் தி.மு.க.,விற்கு மாற்றுங்கள். அங்கு தளபதியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுகிறோம். இதுகுறித்து தலைமையிடம் வலியுறுத்துவோம்,'' என்றனர்.
மூர்த்தி ஆதரவாளர்கள் கூறுகையில், ''தொகுதியில் கட்சியை வெற்றி பெறச்செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை அனுமதி பெற்று மூர்த்தி மேற்கொள்கிறார். அதற்காகவே, இப்படிப்பட்ட மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் நடக்கிறது. இதில் தேவையில்லாமல், யாரும் குழப்ப முயற்சிக்கக்கூடாது,'' என்றனர்.
இதனால் மதுரை தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது.

