ADDED : ஆக 20, 2024 07:35 AM
அவனியாபுரம்: மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தமிழில் ஒலித்த விமானி பிரியன் விக்னேஷின் அழகிய அறிவிப்பு பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
விமானம் புறப்படுவதற்கு முன் பிரியன் விக்னேஷ் தாழ்நிலை மேகக் கூட்டங்களால் புறப்பாட்டிற்கு பின்பு சிறு அதிர்வுகளை எதிர்கொள்ள நேரிடும். பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது இருக்கை பட்டையை அணியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என துவங்கி தொடர்ந்து கூறியதாவது:
விமானம் புறப்பாட்டிற்குபின் இடதுபுறமாக அமர்ந்திருக்கக்கூடிய பயணிகள் வெளியே பார்த்தால் வைகை கரையின் மதுரை மாநகரின் நகருக்கு நடுவே பிரதானமாக அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் காட்சியை மிகத்தெளிவாக கண்டு ரசிக்கலாம். எங்களுடனான தங்களது பயணம் இனியதாக அமைந்திட விமான நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துக்கள். மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்ட பயணி ஒருவர் இன்ஸ்டாகிராமில் அருமை நல்ல தமிழில் பேசி மகிழ்வித்ததற்கு அன்பும் நன்றியும் வாழ்த்துக்களும் என பதிவு செய்துள்ளார். அவருக்கு விமானி நன்றி தெரிவித்துள்ளார்.

