மதுரை- தூத்துக்குடி ரயில் திட்டம் ரத்து: மக்கள் அதிர்ச்சி
மதுரை- தூத்துக்குடி ரயில் திட்டம் ரத்து: மக்கள் அதிர்ச்சி
UPDATED : ஜன 11, 2025 11:15 PM
ADDED : ஜன 11, 2025 11:07 PM

மதுரை : 'மதுரை - துாத்துக்குடி இடையிலான புதிய ரயில் பாதை திட்டம், தமிழக அரசின் முடிவால் கைவிடப்பட்டது' என்ற ரயில்வே அமைச்சர் அறிவிப்பால், தென்மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை - துாத்துக்குடி இடையே விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக ரயில் போக்குவரத்து உள்ளது. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம், 2011 - 12ல் அறிவிக்கப்பட்டது.
சோதனை ஓட்டம்
வளர்ந்து வரும் துாத்துக்குடி துறைமுகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும், பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், 2,054 கோடி ரூபாயில், இந்த 143 கிலோ மீட்டர் பாதைக்கு திட்டம் வகுக்கப்பட்டது.
இதற்கான முழு செலவையும் மத்திய அரசு செய்ய வேண்டும். தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து ரயில்வேயிடம் ஒப்படைப்பது மட்டும் தமிழக அரசின் பொறுப்பு. ரயில்வே அமைச்சர் அறிவித்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் வேலை துவங்கியது.
துாத்துக்குடி அடுத்த மீளவிட்டான் என்ற இடத்தில் இருந்து, மேல்மருதுார் வரையிலான 18 கிலோ மீட்டர் துாரத்துக்கு வேகமாக வேலைகள் நடந்தன. 324 கோடி ரூபாய் செலவிட்டு நிலம் எடுத்து, தண்டவாளம் அமைத்து, 2022ல் வேலை முடித்தனர். ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் வந்து பார்த்து, ரயில் ஓட தகுதி இருப்பதாக சான்றிதழ் கொடுத்தார். சோதனை ஓட்டம் நடந்தது.
ஆனால், மேல்மருதுாரில் இருந்து திருப்பரங்குன்றம் வரையிலான அடுத்த கட்டத்துக்கான வேலையில் வேகம் இல்லை; நிலம் எடுப்பும் நடக்கவில்லை.
எனவே, நில ஆர்ஜிதம் செய்வதற்காக தனி அதிகாரி நியமித்து, விளாத்திகுளம், திருப்பரங்குன்றத்தில் அலுவலகங்களும் திறக்க, 2023 பிப்ரவரியில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்பிறகும் துரிதமாகவில்லை. 871 ஹெக்டேர் தேவை என்ற நிலையில், வெறும் 75 ஹெக்டேர் மட்டுமே ஆர்ஜிதம் செய்தனர்.
இந்த, 13 ஆண்டு தாமதத்தால் திட்டத்தின் செலவு மதிப்பீடு வெகுவாக அதிகரித்தது என மத்திய அரசு தெரிவித்தது. தமிழக அரசோ, எங்களிடம் உபரி நிதி கிடையாது என்பதால், நீங்கள் ஒதுக்கும் நிதிக்கு ஏற்ற மாதிரி தான் நில ஆர்ஜித பணிகள் நடக்கும் என்று கூறியது.
எனவே, 2024 இடைக்கால பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு, தேர்தல் முடிந்த பின் அறிவித்த பட்ஜெட்டில், 19 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கியது.
முதல்வர் கடிதம்
நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் திட்டத்தையே மறுபரிசீலனை செய்வதாக தகவல் கசிந்தபோது, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி ரயில்வே அமைச்சரிடம் அதுபற்றி லோக்சபாவில் கேட்டிருந்தார்.
திட்டத்தை கைவிட நினைக்கிறீர்களா என்ற அவரது கேள்விக்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர், 'கைவிடும் எண்ணம் இல்லை; பணிகள் நடக்கின்றன' என்றார்.
ஆகஸ்ட் மாதம் பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில், தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற அதிக நிதி ஒதுக்குமாறு கேட்டிருந்தார். அதில், அவர் குறிப்பிட்ட திட்டங்களில் மதுரை -- துாத்துக்குடி பாதையும் உண்டு.
எப்படி நம்ப முடியும்?
இந்த நிலையில், நிலம் கையகப்படுத்த அமைத்த திருப்பரங்குன்றம், விளாத்திகுளம் அலுவலகங்கள் டிசம்பர் 31ம் தேதியுடன் மூடப்படும் என, தமிழக அரசு அவற்றின் ஊழியர்களுக்கு தகவல் அனுப்பியது.
'நிலம் கையகப்படுத்த பத்திரிகைகளில் பெரிது பெரிதாக அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்; அதற்கு தேவையான நிதியைக்கூட மத்திய அரசு தரவில்லை. அப்படி என்றால், கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க உடனே நிதி தருவர் என்று எப்படி நம்ப முடியும்?
'செலவு செய்யுங்கள், ஒதுக்கீடு செய்கிறோம் என்ற வாய்மொழி உத்தரவாதத்தை எப்படி நம்ப முடியும்? சென்னை மெட்ரோ திட்டத்திலேயே பாடம் கற்றுக் கொண்டோம்' என, தமிழக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த பின்னணியில் தான், 'மதுரை- - துாத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசிடமிருந்து கடிதம் வந்ததால், திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது' என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசு என்ன காரணம் சொன்னது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இதனால், தென்மாவட்ட மக்களிடம் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொழில் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், 'சென்னை மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து நிதி பெற்றது போல, தென் மாவட்டங்களை தொழில் மண்டலமாக உயர்த்த உதவும் இந்த திட்டத்துக்கும், மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது.
தொழில் வர்த்தக சங்க தலைவர் ரத்தினவேலு, “தமிழக அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு மேம்பட்டால் தான் சுற்றுலா, தொழில் வளம் பெருகும்,” என்றார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், “நாட்டின் கிழக்கு, மேற்கு கடற்கரைகளை இணைக்கும் பாலமாக அமையும் இத்திட்டத்தால், மூன்று மாநிலங்கள் முன்னேற வழி ஏற்படும் என்பதால், தமிழக எம்.பி.,க்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்,” என்றார்.
இது மட்டும் அல்ல, தமிழகத்தில் துவக்கப்பட்ட மேலும் சில ரயில் பாதை திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன. திண்டிவனம்- - செஞ்சி- - திருவண்ணாமலை; சென்னை- - மகாபலிபுரம் - -கடலுார்; ஆவடி - -ஸ்ரீபெரும்புதுார் - -கூடுவாஞ்சேரி திட்டங்களை சொல்லலாம். நிலம் எடுத்து தராவிட்டால் என்ன வேலை நடக்கும் என்று மத்திய அரசு கேட்கிறது. நிதி இல்லாமல் நிலம் எடுப்பது சாத்தியமா என, தமிழக அரசு கேட்கிறது. மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இல்லை என்றால், எங்கள் கதி இதுதானா என மக்கள் கேட்கின்றனர்.
ரயில்வே அமைச்சர் சொல்வது பொய் : அமைச்சர் சிவசங்கர்
'மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடுமாறு, தமிழக அரசு ஒருபோதும் கூறவில்லை' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு, புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழக அரசு கோரியதாகவும், அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். இது, முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி.தமிழக அரசு ஒருபோதும், எந்த விதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
இந்த புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு, ரயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணைப்படி, 926 ஹெக்டேர் நிலம் எடுப்பு செய்து, ரயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு, மதுரை, விருதுநகர், துாத்துக்குடி கலெக்டர்களிடம் கேட்டுக் கொண்டதில், இத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நில எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி, தமிழக அரசு ஆணையிட்டது. மேலும், இந்த திட்டம் உள்ளிட்ட பிற ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு, கடந்த ஆண்டு ஆக., 19ம் தேதி முதல்வர், ரயில்வே அமைச்சரை கேட்டுக் கொண்டார்.
அப்படியொரு கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழக அரசு வேண்டாம் என்று கூறி விட்டது என, மத்திய அமைச்சரே பொறுப்பற்ற முறையில் பேசலாமா?
இத்திட்டத்திற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு, விருதுநகர், மதுரை மற்றும் துாத்துக்குடி ஆகிய கலெக்டர்களால், ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, தற்போது வரை அதற்கான பதில் பெறப்படவில்லை. அந்த கடித விபரங்களாவது ரயில்வே அமைச்சருக்கு தெரியுமா?
தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்த தற்போதைய நிலை மற்றும் நிதி நிலை அறிக்கை கேட்கப்பட்டது. அதன்படி, மதுரை - துாத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்தில், மீளவிட்டான் - மேலமருதுார் வரை, 18 கி.மீ., அளவில் பணி முடிக்கப்பட்டு விட்டது.
மீதமுள்ள பிரிவுகளுக்கான பணி, குறைந்த சரக்கு வாய்ப்புகள் உள்ளதால் கைவிடப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.எனவே, இத்திட்டத்தை கைவிடக்கோரி எந்தவித கடிதமும் எழுதவில்லை; வாய்மொழியாகவோ தமிழக அரசால் ரயில்வே துறைக்கு எதுவும் சொல்லப்படவில்லை; மாறாக இத்திட்டத்தை துரிதப்படுத்தவே, தமிழக அரசு இதுவரை கோரி வருகிறது. தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான தகவலை, மத்திய அமைச்சரே வெளியிடலாமா?
முதல்வரால் பெரிதும் வலியுறுத்தப்படும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, உடனடியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.