ADDED : பிப் 22, 2024 02:48 AM

மயிலம்:விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் உள்ள பழமையான முருகன் கோவில் புனரமைக்கப்பட்டது. அதையொட்டி நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான பூஜை கடந்த 15ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது.
மறுநாள் 16ம் தேதி சுமங்கலி பூஜை, 17ம் தேதி வாஸ்து பூஜை நடந்தது. 18ம் தேதி முளைப்பாரி இட்டு, காப்பு கட்டப்பட்டது. மாலை யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று முன்தினம் காலை வீர சைவ அடியார்கள் சார்பில், 20ம் பட்ட சுவாமிகளுக்கு குரு திருவடி வழிபாடு மற்றும் நான்காம் யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை மங்கல இசை, நாடி சந்தானம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 10:45 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி, மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
மாலை அபிஷேகம் மற்றும் பூஜை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருமண வைபவம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட சுவாமிகள் மற்றும் திருமடத்தினர் செய்திருந்தனர்.