சபரிமலை : பொன்னம்பல மேட்டில் நேற்று காட்சி தந்த மகர ஜோதியை சபரிமலையில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்கி பக்தி பரவசத்துடன் வணங்கி மலை இறங்கினர்.
டிச.,30- ல் தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. அதிகாலை 2:30 மணிக்கு நடை திறந்து 2:46 மணிக்கு மகராசங்கரம பூஜை நடைபெற்றது.
இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொடுத்து விடப்பட்ட நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் நேரடியாக அபிஷேகம் செய்ய செய்யப்பட்டது. 3:00 மணி முதல் நெய்யபிஷேகம், கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மதியம் 12:30 மணிக்கு உச்சபூஜை நடைபெற்று ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
மாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் கோயில் முன் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். பந்தளத்தில் இருந்து ஜன.,13-ல் புறப்பட்ட திருவாபரண பவனி நேற்று மாலை 6:04 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. 6:40க்கு சன்னிதானம் வந்தது.
பக்தர்கள் சரண கோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி கொண்டு வரப்பட்டது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து 6:45-க்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கின.
சில வினாடிகளில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். சிறிது நேரத்தில் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது.
ஜோதி தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கி ஊர் திரும்பினர். 3700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.