ADDED : அக் 09, 2025 02:29 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் காலனி மாரியம்மன் கோவில் பின்புறம் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக பண்ருட்டி திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர்கள் அம்பிகா, ஜெயமூர்த்தி, நுண்ணறிவு பிரிவு போலீசார் பாண்டியன், மணிகண்டன், முருகன், சுரேஷ் தென்னரசு ஆகியோர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
சோதனையில் திருவாமூர் சுப்ரமணி மகன் வெற்றிவேல் என்பவர் வீட்டிற்கு அருகாமையில் நாட்டு வெடிகள் தயாரித்தது தெரியவந்தது. தொடர்ந்து 30 கிலோ வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்ததாக திருவாமூரை சேர்ந்த வெற்றிவேல்,51; என்பவரை கைது செய்தனர்.