ADDED : ஜன 07, 2025 01:48 AM

கொச்சி, ஜன.
மலையாள நடிகை ஹனி ரோஸ் குறித்து, சமூக வலைதளத்தில் தரக்குறைவாக கருத்து பதிவிட்ட நபரை, கேரள போலீசார் கைது செய்தனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஹனி ரோஸ், 33.
இவர், சமூக வலைதளமான பேஸ்புக்கில் நேற்று முன்தினம் காட்டமாக தன் கருத்தை பதிவிட்டார்.
இதில் அவர், 'சமீப காலமாக என்னை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையில் ஒரு நபர் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த நபர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, என்னை அவர் ஏளனமாக விமர்சித்தார்.
இதையடுத்து, அவர் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தேன்.
இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் என் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தரக்குறைவான கருத்துக்களை அவர் பதிவிட்டு வருகிறார்.
'அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன். வசதி படைத்தவர், செல்வாக்குமிக்கவர் என்றால், என்ன வேண்டுமென்றாலும் பேசலாமா? அவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை' என, குறிப்பிட்டுஇருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஹனி ரோஸ், கேரள போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்நபரை நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தவிர, சமூக வலைதளங்களில் நடிகை ஹனி ரோஸ் பற்றி தரக்குறைவான கருத்துக்களை பதிவிட்டதாக, 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.