ADDED : ஜன 30, 2025 10:46 PM

மதுரை; துாத்துக்குடி மாவட்டம் முறம்பனில் நடந்த கொலை வழக்கில் ஒருவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆயுள் தண்டனை விதித்தது.
முறம்பனைச் சேர்ந்தவர் செந்துார். இவர் தன் மனைவியுடன் அதே பகுதி கோபால்சாமிக்கு 60, தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டார். செந்துார் தாக்கியதில் கோபால்சாமி காயமடைந்தார். ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அவர் இறந்தார். செந்துார் மீது மணியாச்சி போலீசார் வழக்கு பதிந்தனர். அவருக்கு காயம் விளைவித்தல் பிரிவில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது துாத்துக்குடி விரைவு நீதிமன்றம்.
இதை எதிர்த்து செந்துாரும், கொலைக் குற்றத்திற்குரிய பிரிவில் தண்டனை விதிக்க கேட்டு மணியாச்சி இன்ஸ்பெக்டரும் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு: எதனால் மரணம் ஏற்பட்டது என்பதை கீழமை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை. செந்துாரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. கீழமை நீதிமன்ற உத்தரவு மாற்றியமைக்கப்பட்டு செந்துாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.