ADDED : மே 19, 2025 03:24 AM

மூணாறு: கேரளா இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே வண்ணப்புரம், கோட்டப்பாறை வியூ பாய்ன்ட் பகுதியில் அதிகாலையில் செங்குத்தான பாறையில் இருந்து 70 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவர் மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
இப்பகுதியில் காலையில் மேகங்கள் சூழந்து ரம்யமாக காட்சியளிக்கும். அதனை காண அதிகாலையில் வியூ பாய்ன்ட் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். அதன்படி வண்ணப்புரத்தைச் சேர்ந்த நண்பர்கள் சாம்சன் 23, சிவாஜி, விஷ்ணு நேற்று முன்தினம் அதிகாலை 3:30 மணிக்கு கோட்டப்பாறை வியூ பாய்ன்ட் உள்ள பகுதிக்கு சென்றனர். அப்போது சாம்சன் எதிர்பாராத விதமாக கால் தவறி செங்குத்தான பாறையில் உருண்டார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
இதன்பின் காளியாறு ஏ.எஸ்.ஐ., ஷம்ஸ் தலைமையில் போலீசார், தொடுபுழா தீயணைப்பு துறையினர் அங்கு சென்றனர். செங்குத்தான பாறையில் நடத்திய தேடுதல் வேட்டையில் 70 அடி பள்ளத்தில் பாறையில் கற்கள், புல் ஆகியவற்றில் சிக்கி சாம்சன் கிடப்பதை பார்த்தனர். பாறை, இருள் மீட்பு பணிக்கு பெரும் சவாலாக அமைந்தது. எனினும் மூன்றரை மணி நேரம் கடுமையாக போராடி சாம்சனை வலையில் கட்டி மீட்டனர். அவர் பாறையில் உருண்டபோது உடலில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு தொடுபுழாவில் சிகிச்சை பெற்றார்.