மரங்களுக்கு திருமணம் செய்வது புனிதமானது; உயர்நீதிமன்றம் கருத்து
மரங்களுக்கு திருமணம் செய்வது புனிதமானது; உயர்நீதிமன்றம் கருத்து
ADDED : மார் 16, 2024 11:48 PM

மதுரை :மரங்களுக்கு இடையே திருமணம் செய்து வைப்பதை புனிதமாக கருதுவதாக கருத்து பதிவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கோயில் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண உத்தரவிட்டது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அறக்கட்டளை நிறுவனர் தாக்கல் செய்த மனு: மற்றொரு அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்யக்கோரி பதிவுத்துறை ஐ.ஜி., கரூர் மாவட்ட பதிவாளர், மேலக்கரூர் சார்பதிவாளருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். ஒரு கோயில் வளாகத்தில் உள்ள வேம்பு, அரசமரத்திற்கு திருமணம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: இக்கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, அரசமரம் மணமக்கள். அரசமரம் ஆணாகவும், வேப்ப மரம் பெண்ணாகவும் கருதப்படுகிறது. மனுதாரர்,'வேப்ப மரம் இளமையானது. திருமணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தேதி மங்களகரமான நாள் அல்ல,' என ஆட்பேசம் தெரிவிக்கிறார்.
மரங்களுக்கு இடையே திருமணம் செய்து வைப்பதை மிக புனிதமாக கருதுகிறேன். பக்தி மற்றும் மத அம்சங்களை மறந்து விடுவோம். மரங்கள் இயற்கையின் ஒரு அங்கம். மரங்கள் இல்லையெனில் நாம் ஒரு நொடி கூட வாழ முடியாது.
வேப்ப மரம் பழமையானது. வயது வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சேபனை காலாவதியான ஆணாதிக்க கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அவரை விட 6 வயது மூத்தவர்.
நீதிமன்றங்களின் செயல்பாடு தகராறுகளை தீர்ப்பது மட்டுமே. எல்லா சர்ச்சைகளும் தீர்ப்பிற்கு ஏற்றதாக இல்லை. தீர்வு காணக்கூடியவை மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். எதிர்மனுதாரர்களில் ஒருவரான தனிநபர் சார்பில் மார்ச் 18 முதல் 20 வரை நடத்தும் 'ஏழுதிங்கள் சீர் விழா' நடத்துவதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
வருவாய்த்துறை அதிகாரிகளின் சமாதான கூட்டத்தில் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படும் என நம்புகிறேன்.
ஒரு அறக்கட்டளை 2016 ல் துவக்கப்பட்டது. அது கோயிலை நிர்வகிக்கிறது. இது பொதுக்கோயில் அல்ல. இது ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த குடும்பங்களால் வழிபடப்படுகிறது. மற்றொரு அறக்கட்டளை 2024 ல் பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது.
முதலில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை கோயிலை நிர்வகிக்கிறது. ஒரு புதிய அறக்கட்டளை திடீரென கோயிலின் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது. உண்மையில் முதலில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் இரண்டாவது அறக்கட்டளையை உருவாக்கியுள்ளனர். இதை சிவில் நீதிமன்றம் மூலம்தான் தீர்வு காண வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.  இவ்வாறு உத்தரவிட்டார்.

