ADDED : ஜன 05, 2025 03:07 AM
சென்னை: சென்னையில் வீதிவீதியாக சென்று மக்களிடம் குறை கேட்டு வரும் அமைச்சர் சேகர்பாபு, நேற்றும் அதற்காக மக்களை சந்தித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கடந்த கால ஆட்சி போல இல்லாமல், முதல்வர் உத்தரவுப்படி, மக்களை தேடி மேயர், அமைச்சர், அதிகாரிகள் என பலரும் சென்று குறைகளை நேரில் கேட்கிறோம். மதுரையில் நடிகை குஷ்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டார். பின், விடுவிக்கப்பட்டார். அவரை ஆடுகளோடு அடைக்கவில்லை. அவர் தங்க வைக்கப்பட்ட இடமும் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த இடமும் வெவ்வேறானவை.
போராட்டம் நடத்த அனுமதி கிடைப்பதில்லை என எந்த கண்ணோட்டத்தில் மா.கம்யூ., செயலர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார் எனத் தெரியவில்லை. தி.மு.க., ஆட்சியில் தான், ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வரை, தி.மு.க., ஆட்சியை புகழ்ந்தவர் பாலகிருஷ்ணன். அரசின் எல்லா திட்டங்களையும் புகழ்ந்தவர். அவருக்கான கோரிக்கை என்னவென்று தெரிந்தால், அதற்கான பரிகாரம் தேடலாம்.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

