ஐ.சி.எப்.,பில் சிங்களவருக்கு பயிற்சி முற்றுகையிட்ட ம.தி.மு.க.,வினர் கைது
ஐ.சி.எப்.,பில் சிங்களவருக்கு பயிற்சி முற்றுகையிட்ட ம.தி.மு.க.,வினர் கைது
ADDED : ஆக 17, 2011 01:12 AM
சென்னை : ஐ.சி.எப்.,பில் சிங்களவருக்கு பயிற்சியளிக்கப்படுவதைக் கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்த வந்த, 40க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து, இலங்கைக்கு ரயில் பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. இப்பெட்டிகளை கையாள்வது குறித்த பயிற்சி பெறுவதற்காக இலங்கையில் இருந்து, கடந்த 2009ம் ஆண்டு 12 சிங்களவர்கள் வந்து பயிற்சி பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஜெய விக்கிரமா, சசியா குமாரா, மெண்டிஸ், சுமித்ர மாலா, ராஜபக்ச, நம்சேனா ஆகிய ஆறு சிங்களவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்தனர்.
அவர்கள் ஆறு பேரும், தங்களுக்கு ரயில் பெட்டிகளை கையாள்வது குறித்து பயிற்சியளிக்குமாறு, ஐ.சி.எப்., நிர்வாகத்தினரிடம் கோரியதுடன், அதற்கான கட்டணமாக, ஒன்றரை லட்ச ரூபாய் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நேற்று முதல் 29ம் தேதி வரை அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. நேற்று பயிற்சி துவங்கிய நிலையில், ம.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா தலைமையில், 100க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.,வினர் ஐ.சி.எப்., அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். போலீசார், 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனர். ம.தி.மு.க.,வினர் கைது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.