86 டி.எம்.சி.,யை எட்டியது மேட்டூர் அடுத்தாண்டு பாசன சிக்கல் தீர்ந்தது
86 டி.எம்.சி.,யை எட்டியது மேட்டூர் அடுத்தாண்டு பாசன சிக்கல் தீர்ந்தது
ADDED : டிச 08, 2024 02:55 AM
சென்னை:மேட்டூர் அணை மீண்டும், 86 டி.எம்.சி.,யை எட்டியுள்ளதால், அடுத்தாண்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான சிக்கல் தீர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, 93.4 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. இந்த அணை வாயிலாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
கரூர், நாமக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையும் தீர்க்கப்படுகிறது.
அணையில், 60 டி.எம்.சி.,க்கு மேல் தண்ணீர் இருந்தால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடிக்கு ஜூனில் தண்ணீர் திறக்க வேண்டும்.
சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி முடிந்ததும், அடுத்தாண்டு ஜன., 28ம் தேதி நீர் திறப்பை நிறுத்த வேண்டும்.
நடப்பாண்டு ஜூன் மாதம் அணையில் போதிய நீர் இல்லாததால், குறுவை பாசனத்திற்கு திறக்கப்படவில்லை. அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஜூலை 29ம் தேதி நீர் திறக்கப்பட்டது.
இதை பயன்படுத்தி, சம்பா பருவ நெல் சாகுபடியில் விவசாயிகள் இறங்கினர்.
பாசனத்திற்கு மட்டுமின்றி, குடிநீர் தேவைக்கும் அணையில் இருந்து தொடர்ச்சியாக நீர் எடுக்கப்பட்டது.
கர்நாடகாவில் இருந்து நீர்வரத்து குறைந்ததால், அணையின் நீர் இருப்பும் வேகமாக குறைந்து வந்தது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்வதால், பாசன தேவை பூர்த்தியாகி வருகிறது. எனவே, அணையில் இருந்து வினாடிக்கு, 1000 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நீர் இருப்பும், 86 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.
இந்த நீரை வைத்து, அடுத்தாண்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்யலாம்.