ADDED : அக் 16, 2025 02:03 AM
சென்னை: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான இடம்பெயர்வு சான்றுகள் இனி, 'டிஜிட்டல்' ஆவணங்களாக மட்டுமே வழங்கப்பட உள்ளன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தங்களின் படிப்பை முடித்த பின், வேறு கல்வி நிறுவனங்களில் சேர, இடம்பெயர்வு சான்றிதழ் எனும், 'மைக்ரேஷன் சர்டிபிகேட்'களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சான்றிதழை, இனி காகித வடிவில் வழங்கப் போவதில்லை என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
அதேநேரம், இடம்பெயர்வு சான்றிதழ்கள் தேவைப்படுவோர், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்து, 'டிஜி லாக்கர்' செயலியின் வாயிலாக, டிஜிட்டல் ஆவணத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை பரிசோதிப்பதும், எல்லா இடங்களிலும் கையாள்வதும் எளிது என்பதால், சி.பி.எஸ்.இ., இந்த முடிவை எடுத்துள்ளது.
கட்டாயமாக காகித நகல் தேவைப்படுவோர், சி.பி.எஸ்.இ.,யின் 'டூப்ளிகேட் அகாடமிக் டாகுமென்ட் சிஸ்டம்' எனும் பிரிவில் உள்ள cbseit.in/cbse/web/dads/List.aspx என்ற இணையதள இணைப்பின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.