ADDED : பிப் 08, 2026 01:10 AM

''அ மெரிக்காவின், கூடுதல் வரி, 25 சதவீதம் ரத்து செய்யப்பட்டது, இந்திய ஆடை ஏற்றுமதி துறைக்கு வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல்,'' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
அமெரிக்காவுடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை வெளியாகியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி.
இனிவரும் பத்தாண்டுகள், இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறைக்கான மாபெரும் தசாப்தமாக அமையும். உலகளாவிய வர்த்தகர்கள் விரும்பும் ஆதார மையமாகவும் இந்தியா உருவெடுத்து வருகிறது.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறைக்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் போன்றது. அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி உருவாகும். குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளரும்.
ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில், நீடித்த நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும். வரி குறைக்கப்பட்டதால், இந்தியாவின் உலகளாவிய சந்தை அணுகல் எளிதாகும்; போட்டி திறன் அதிகரிக்கும். இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறைக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

