பஸ் நிலையங்கள் உள்ளே செல்ல மினி பஸ்களுக்கு வருகிறது தடை!
பஸ் நிலையங்கள் உள்ளே செல்ல மினி பஸ்களுக்கு வருகிறது தடை!
ADDED : நவ 29, 2024 06:33 AM

சென்னை: பஸ் நிலையங்கள் உள்ளே வந்து செல்ல, மினி பஸ்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில், 2950 தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மினி பஸ்களுக்கான தேவை அதிகரித்து வரும் வகையில், புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளன. அதன்படி, 25 கி.மீ., வரை மினி பஸ்களை இயக்கலாம்.
இதுதொடர்பாக, அரசு போக்குவரத்து கழகங்கள், பொதுமக்கள், மினி பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம், கடந்த ஜூலை 22ல் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பஸ் நிலையங்களுக்கு உள்ளே, மினி பஸ்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாககூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கொடியரசன் கூறியதாவது:
டீசல் விலை, உதிரிபாகங்கள் விலை உயர்வால், பெரும் நஷ்டத்தில் மினி பஸ்களை இயக்கி வருகிறோம். அதனால், தமிழகத்தில் இருந்த மினி பஸ்கள் எண்ணிக்கை, 7500ல் இருந்து, 2940 ஆக குறைந்துள்ளது.
தற்போது, மினி பஸ் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், அரசு நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கதக்கது. ஆனால், பஸ் நிலையங்களின் உள்ளே செல்ல, மின்பஸ்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதை ஏற்க முடியாது.
பஸ் நிலையங்களுக்கு வெளியே, சாலைகள் ஓரமாக மினி பஸ்களை நிறுத்தி இயக்கும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பயணியர் வந்து செல்லவும் சிரமப்படுவர். சாலைகளை கடக்கும் போது, பயணியர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.