ADDED : நவ 27, 2025 11:53 PM

சிவகங்கை: வருமானத்திற்கு அதிகமாக, 1.10 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பதிவு செய்த வழக்கில், அமைச்சர் பெரியகருப்பன் உட்பட அவரது குடும்பத்தினரை, சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி விடுதலை செய்தார்.
தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சராக பெரியகருப்பன் 2006 -- 2011ல் இருந்தார். அவரது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் அமைச்சர் பெரியகருப்பன், அவரது தாய் கருப்பாயி, மனைவி பிரேமா, மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி முன்னிலையில் நடந்தது. விசாரணை நடந்து வந்த காலத்தில் கருப்பாயி உயிரிழந்தார்.
மற்ற நான்கு பேரும் நேற்று விசாரணைக்கு வந்திருந்தனர் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

