கால்நடை ஆம்புலன்ஸ்களை ஆய்வு செய்ய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவு
கால்நடை ஆம்புலன்ஸ்களை ஆய்வு செய்ய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவு
ADDED : மே 16, 2025 11:29 PM
சென்னை:''கால்நடை ஆம்புலன்ஸ்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவை ஆண்டு முழுதும் சேவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கால்நடை ஆம்புலன்ஸ்களில், 60 பழுதாகி செயல்படாமல் இருப்பதாக, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நமது நாளிதழில், கடந்த 14ம் தேதி செய்தி வெளியானது. நேற்று முன்தினம் சென்னையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், துறையின் கூடுதல் இயக்குநர்கள், மண்டல இயக்குநர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது:
கால்நடை மருத்துவ சேவைகள் கிடைக்காத தொலைதுார கிராமங்களில், மருத்துவ சேவை வழங்க, கால்நடை ஆம்புலன்ஸ் செயல்பாட்டில் உள்ளது. அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அனைத்து ஆம்புலன்ஸ்களும், ஆண்டு முழுதும் சேவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் வாகனங்களில் காலியாக உள்ள, கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கு, பணி ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர்களை, தாமதிக்காமல் நியமிக்க வேண்டும்.
இதுகுறித்து, ஆம்புலன்சை இயக்கும் ஏஜன்சிக்கு அறிவுறுத்த வேண்டும். கிராமப்புற நிலமற்ற விவசாயிகளின் கால்நடைகளுக்கு, பசுந்தீவனம் ஆண்டு முழுதும் கிடைக்க, பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறை செயலர் சுப்பையன், இயக்குநர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.