ADDED : மார் 21, 2025 12:51 AM
சென்னை: “பால் விலையை உயர்த்த மாட்டோம்,” என, பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ஜெயசங்கரன்: விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக பால் உற்பத்தி தொழில் உள்ளது; 1 லிட்டர் பால் உற்பத்திக்கு, 36 ரூபாய் செலவாகிறது என, விவசாயிகள் சொல்கின்றனர். ஆனால், கொள்முதல் விலை குறைவாக உள்ளது. ஊக்கத்தொகை 3 ரூபாய் வழங்கப்படுகிறது. எனவே, லிட்டர் பால் கொள்முதல் விலையை, 50 ரூபாயாக உயர்த்த வேண்டும். ஊக்கத்தொகை தகுந்த நேரத்தில் கொடுக்கப்படுவது இல்லை.
அமைச்சர் ராஜகண்ணப்பன்: முந்தைய ஆட்சியை விட தற்போது, 11 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது. பால் உற்பத்தி செய்பவரும் ஏழை; வாங்குபவரும் ஏழை. பால் உற்பத்தியாளர்களுக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்க, 143 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. லிட்டர் பால், 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பால் பாக்கெட்டுக்கு, 2 ரூபாய் கமிஷன் தான் கிடைக்கிறது. தனியார் பால் பாக்கெட், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பால் விலையை நாங்கள் ஏற்ற மாட்டோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.