ADDED : டிச 15, 2024 12:27 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படும் என, நேற்று முன்தினம் கூறிய அமைச்சர் கே.என்.நேரு, நேற்றைய ஆய்வின் போது ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து பின்வாங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில், நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்த வடகிழக்கு பருவ மழையால், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட நெல், வாழை பயிர்கள் சேதமடைந்தன.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள சேதப்பகுதிகளை நேற்றும் பார்வையிட்டார்.
ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட்டில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியையும் பார்வையிட்டார்.
நேற்று முன்தினம், அமைச்சர், 'தாமிரபரணிக்கு செல்லும் நீர் ஓடை மீது உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங் களை கணக்கெடுத்து விட்டோம். நிச்சயம் அகற்றுவோம்' என்றார்.
ஆனால் நேற்று அவரது பார்வை மாறி இருந்தது.
நேற்றைய ஆய்வில், ''5 கோடி ரூபாய் மதிப்பில் ஜங்ஷன் பகுதியில் ஓடை பகுதியை விரிவுபடுத்தி இருபுறமும் சுவர் எழுப்பி பாலம் அமைக்கப்படும்,'' என்றார். ஆனால் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் குறித்து எதுவும் கூறவில்லை.
அதுமட்டுமின்றி, ''ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டி விட்டான் என்ன செய்ய... அவனுக்கு அப்ரோச் கொடுங்கப்பா,'' என, கூறி சென்றார்.