அவதுாறு பரப்பும் அமைச்சர் நேரு; இ.பி.எஸ்., பதிலடி
அவதுாறு பரப்பும் அமைச்சர் நேரு; இ.பி.எஸ்., பதிலடி
ADDED : ஜூலை 20, 2025 07:48 PM

சென்னை: அமைச்சர் நேருவுக்கு பதிலடி தரும் வகையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை; 'மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற லட்சியத்துடன், ஜூலை 7ம் தேதி தொடங்கிய எழுச்சிப் பயணம் இமாலய வெற்றி பெற்றது.
நகராட்சி சொத்துக்களை கொள்ளையடிக்கும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, எழுச்சிப் பயணத்தை தவறாக சித்தரித்து, சம்மந்தியை மீட்போம், சம்பாதித்த பணத்தைக் காப்போம், மக்களை மறப்போம், தமிழகத்தை விற்போம், மகனைக் காப்போம், என என்மீது அவதூறு பரப்பி இருக்கிறார்.
ஆனால், உண்மை என்னவென்றால், “மந்தி தனது குட்டியை விட்டு ஆழம் பார்க்கும்” என்ற பழமொழிக்கு ஏற்றார்போல், ஸ்டாலின், அமைச்சர் நேருவை விட்டு அறிக்கை என்ற பெயரில் ஆழம் பார்த்திருக்கிறார்.
“மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்” என்கிற என்னுடைய முதற்கட்ட எழுச்சிப் பயணத்தின் மூலம், நான் உணர்ந்ததை, உங்கள் தோல்வி மாடல் அரசுக்கு ஒரு குறள் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தவகுத்தலும் வல்ல தரசு.
இவற்றை எல்லாம் நீங்கள் தமிழகத்துக்குச் செய்யவில்லை என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் குற்றச்சாட்டு. நீங்கள் என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி, எனது எழுச்சிப் பயணம் தொடரும். மக்கள் ஆதரவு இன்னும் பெருகும். 2026ல் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, அனைத்து மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நல் ஆட்சியை வழங்குவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.