சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
ADDED : ஏப் 29, 2025 06:56 AM
சென்னை : தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. இவர், 2006 - 2011ல் தி.மு.க., ஆட்சியில் வருவாய் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2012ல், லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகனும், தற்போதைய பழனி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான செந்தில்குமார், மற்றொரு மகன் பிரபு ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த, திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம், பெரியசாமி உள்பட நான்கு பேரை வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2018ல் லஞ்ச ஒழிப்பு துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ''அமைச்சர் பெரியசாமி, அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து, தினசரி விசாரணை நடத்தி, ஆறு மாதத்தில் வழக்கை, திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் முடிக்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.

