எதிரிகள் இருக்கின்றனர்; வலிமையாக இல்லை என்கிறார் ரகுபதி
எதிரிகள் இருக்கின்றனர்; வலிமையாக இல்லை என்கிறார் ரகுபதி
ADDED : ஜன 25, 2026 09:40 PM

புதுக்கோட்டை: “தி.மு.க.,வோடு மோதும் அளவிற்கு எதிரிகள் வலிமையாக இல்லை,” என்று புதுக்கோட்டையில் கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அ.தி.மு.க.,வின் ஒரு பகுதியும், பா.ஜ.,வும் இணைந்த ஒன்று என்பதை தவிர, வலுவாக இல்லை. அது பலவீனமான கூட்டணி. எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், தி.மு.க.,வின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியான, 'இண்டி' கூட்டணியை எதுவும் செய்ய முடியாது.
மக்கள் மனதில் யார் இருக்கிறார்களோ, அவர்கள் தான் வெல்ல முடியும். கூட்டத்தைக்கூட்டி யாராலும் வெல்ல முடியாது. ஏற்கனவே 11 முறை தேர்தல் தோல்வியடைந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் இபிஎஸ்சுக்கு 12-வது தோல்வியை, 2026 சட்டசபை தேர்தல் நிச்சயமாக தரும்.
தி.மு.க.,வுக்கு யார் வந்தாலும் வரவேற்று மரியாதை அளிக்கும் தலைவர் தான் முதல்வர் ஸ்டாலின். பழனிசாமியை, விமர்சித்து விட்டு அவருடன் தினகரன் கூட்டணி சேர்ந்தது வெட்கக்கேடு. தேசிய ஜனநாயக கூட்டணி காட்டும் ஒட்டுமொத்த கூட்டத்தையும், தி.மு.க., மகளிர் அணி கூட்டத்தின் வாயிலாகவே, நாங்கள், 'பீட்' செய்து விடுவோம்.
நாங்கள், 'எதிரிகள் இல்லை' என்று சொல்லும் அளவுக்கு இறுமாப்பு கொண்டவர்கள் கிடையாது. எதிரிகள் இருக்கின்றனர்; எங்களோடு மோதும் அளவிற்கு அவர்கள் வலிமையாக இல்லை. எங்கள் வெற்றிக்கான கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

