750 செவிலியர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கி தரப்படும்; அமைச்சர் மா.சுப்ரமணியன்
750 செவிலியர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கி தரப்படும்; அமைச்சர் மா.சுப்ரமணியன்
ADDED : டிச 22, 2025 04:13 PM

சென்னை: 750 செவிலியர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணைகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதி அளித்துள்ளார்.
சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. வளாகத்தில் செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நீடித்து வரும் நிலையில் அவர்களுடன் சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சருடன், உயரதிகாரிகள், கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடைபெற்றது.
அதன் பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது;
ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் ஏற்கனவே 3614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 1200 செவிலியர்கள் 11 மருத்துவக் கல்லூரிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
169 பேருக்கு உடனடியாக பணி நிரந்தர ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 750 பேருக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.

