தேர்தல் பத்திர நிதி விபரம் தர வங்கிக்கு 2 நிமிடம் போதும் சொல்கிறார் அமைச்சர் தியாகராஜன்
தேர்தல் பத்திர நிதி விபரம் தர வங்கிக்கு 2 நிமிடம் போதும் சொல்கிறார் அமைச்சர் தியாகராஜன்
ADDED : மார் 06, 2024 01:14 AM
சென்னை:''தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விபரங்களை, வங்கிகள் தர இரண்டு நிமிடம் போதும். ஆனால், எஸ்.பி.ஐ., வங்கி, மூன்று அல்லது ஆறு மாதங்கள் அவகாசம் கேட்பது மிகவும் கேவலமானது,'' என, அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி, அரசியல் செய்வதற்காக தொடர்ந்து தமிழகம் வருகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல முறை வருகிறார்.
அரசியல் மட்டும் செய்யாமல், அரசாங்க ரீதியாகவும், தமிழகத்திற்கு சிறப்பான கவனம் செலுத்தி, எங்கள் தேவைகளை ஏற்று, ஒழுங்காக நியாயமாக செயல்பட்டால், இன்னும் நாங்கள் பாராட்டுவோம்.
பிரதமர் ஒரு இடத்திற்கு செல்லும் போது, உள்ளூர் மாநில அரசு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரை வரவேற்கவும், உதவி செய்யவும் ஏற்பாடுகள் செய்யும். முதல்வர் அலுவலகத்தில் இருந்து, அந்த பணி செய்ய எனக்கு கட்டளை வந்தது.
அதை நிறைவேற்றினேன்; இது அரசாங்கத்தின் பணி. இது, தனி நபர் விருப்பமோ, அரசியலோ கிடையாது. நான், 20 ஆண்டுகள், வங்கியில் பணியாற்றி உள்ளேன். மிகப்பெரிய வங்கி தரப்பில் தரவுகளை அளிக்க, மாத கணக்கில் அவகாசம் கேட்பது கேவலமானது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விபரங்களை, இரண்டு நிமிடங்களில் அளித்து விடலாம்.
ஒரு வங்கி நடத்த வேண்டும் என்றால், ரிசர்வ் வங்கியில் உரிமம் கிடைக்க வேண்டும் என்றால், இருக்க வேண்டிய அடிப்படை தொழில்நுட்ப வசதி எதுவும் இல்லையென்றால், ஆறு மாதம் தேவை என்று கூறலாம். இந்தியா, ஐந்தாவது பொருளாதார நாடு என, பெருமிதம் கொள்கிறோம்.
இந்த நாட்டில் உள்ள பெரிய வங்கியில், குறைந்த தகவலை, மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வழங்க முடியாது என்றால், வங்கி சிஸ்டம் ஒழுங்காக இல்லையோ என்ற பயம் வருகிறது. இது, உண்மையாக இருக்க முடியாது.
நீதிமன்றம் நாளை கொண்டு வந்து கொடுங்கள் என்றால், வங்கி கொடுக்கும் அளவுக்கு வசதி இருக்க வேண்டும். இல்லையென்றால், வங்கி தொழிலில் அந்த வங்கி ஈடுபடக் கூடாது.
இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

